"லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தியதால்".. சகாயத்துக்கு டிரான்ஸ்பர் தரப்பட்டதா??
சென்னை: லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகமும், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஒத்துப் போகாதது உள்ளிட்ட காரணங்களுக்காக கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.
அமைச்சர் கோகுல இந்திராவின் உத்தரவுகளுக்குப் பணிந்து போக முடியாது என்று சகாயம் உறுதியாக இருந்ததே அவரது இடமாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
அதேசமயம், கோ ஆப்டெக்ஸில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல்களை சகாயம் கண்டுபிடித்துக் கையில் எடுத்துள்ளார் என்றும், அது விரைவில் வெளிக் கொணரப்படும் என்றும் பரபரப்புத் தகவல்கள் உலா வருகின்றன.

கோ ஆப்டெக்ஸ் சகாயம்
தான் எந்தத் துறையில் எந்தப் பதவியில் இருந்தாலும் அங்கு ஒரு கலக்கு கலக்கி விட்டுத்தான் அடுத்த பதவியில் அமர்வார் சகாயம். மதுரையில் ஆட்சியராக இருந்தபோது அவர் கண்டுபிடித்து கிரானைட் குவாரி மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட சகாயம், அத்துறைக்குப் புத்துயிர் கொடுத்தார்.

கோ ஆப்டெக்ஸை நிமிர வைத்தவர்
தொய்ந்து துவண்டு போய்க் கிடந்த கோ ஆப்டெக்ஸுக்குப் புத்துயிர் கொடுத்து அதை நிமிர்த்தி வைத்தவர் சகாயம்தான் என்று சொல்கிறார்கள். முழுமையாக அதை சரி செய்வதற்குள் தற்போது அவருக்கு இடமாறுதல் வந்து விட்டது.

காரணம் என்ன...
சகாயத்தின் இடமாற்றத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாமே பரபரப்பானவையாக உள்ளன.

கோகுல இந்திராவுடன் மோதலா
கோ ஆப்டெக்ஸ், கைத்தறி மற்றும் ஜவுளித்துறையின் கீழ் வருகிறது. இதன் அமைச்சராக இருப்பவர் கோகுல இந்திரா. சென்னை அண்ணாநகரிலிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடன் சகாயம் மோதியதால்தான் பதவி மாறியதாக கூறப்படுகிறது.

ரூம் கேட்டாரா அமைச்சர்
அமைச்சர் கோகுல இந்திரா. கோ ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் தனக்கென பிரத்யேக அறை வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு சகாயம் மறுத்து விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
அதேபோல சகாயம் எந்தத் துறையில் வேலை பார்த்தாலும் தனது அறையில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை பெரிதாக சுவரில் இடம் பெறச் செய்வது வழக்கம். அமைச்சர் கோகுல இந்திராவுக்கு இந்த வாசகமும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்தடுத்து மோதல்களால் இடமாற்றமா
இப்படி சகாயத்துடன் அடுத்தடுத்து கோகுல இந்திராவுக்கு மோதல்கள் வெடித்து வந்த நிலையில்தான் சகாயத்தை இடமாற்றம் செய்து விட்டதாக கூறுகிறார்கள்.

நேர்மையை இடமாற்றம் செய்ய முடியாதே
ஆனால் சகாயம் இந்த இடமாற்றம் குறித்துக் கவலைப்படவில்லையாம். மாறாக, எங்கு வேண்டுமானாலும் மாற்றட்டும். நான் பணியாற்றத் தயார். பயந்து ஓடி விட மாட்டேன். அவர்களால் என்னைத்தான் இடமாற்றம் செய்ய முடியும். எனது நேர்மையை மாற்ற முடியாது. எங்கு போனாலும் நான் இப்படித்தான் இருப்பேன். பார்த்து விடலாம் என்று கூறி வருவதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications