திடீரென அதிமுக எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்தது இதற்குதானாம்
அதிமுக எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டத்தை சசிகலா திடீரென கூட்டியதற்கு சுவாரசிய காரணங்கள் கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட ஜோரில் 'நகர் வலம்' வந்த சசிகலா 15 நாட்களாக போயஸ் கார்டனில் முடங்கிக் கிடக்கிறார்.. இதனால் தாமும் செயல்பட்டு வருவதாக காட்டிக் கொள்ள திடீரென அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளாராம் சசிகலா.
அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா உடனே தம்மை ஜெயலலிதா என நினைத்துக் கொண்டார். டூப்ளிகேட் ஜெயலலிதா போலவே நடை உடை சிகை அலங்காரம் என அனைத்தையும் மாற்றி நகைப்புக்குள்ளானார்.
உடனே அதிமுக நிர்வாகிகள் சந்திப்பையும் அதிமுக தலைமையகத்தில் நடத்தினார். ஆனால் சசிகலா வந்தபோது அதிமுக தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடியே கிடக்க பின்னர் 'கூலிக்கு' ஆட்கள் வரவழைக்கப்பட்டு கோஷம் போட வைக்கப்பட்டனர்.
குறுக்குசால்
இந்த கூட்டம் முடிந்த நிலையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும் ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியது. சசிகலா என ஒருவர் இருப்பதாக யாரும் நினைக்கவும் இல்லை. அத்துடன் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி செல்ல சசிகலாவும் போட்டிக்கு அறிக்கை விட்டு குறுக்குசால் ஓட்டினார்.
கடும் விரக்தியில் சசிகலா
கடந்த 15 நாட்களாக என்ன செய்வது என தெரியாமல் சசிகலா ஒருவித விரக்தி நிலையில்தான் இருந்துவந்தார். அதுவும் எனக்கே முதல்வர் பதவி என கணவர் நடராஜன் மல்லுக்கட்ட கடும் விரக்தியடைந்தவராக இருந்தார் சசிகலா.
கடுப்பில் மன்னார்குடி கோஷ்டி
இந்த நிலையில் குடியரசு தினத்துக்கு விவிஐபி பாஸ் சசிகலாவுக்கு மட்டும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது; இதை சகித்துக் கொள்ள முடியாத மன்னார்குடி கோஷ்டி சசிகலாவையும் போகவிடவில்லை.
நமது எம்ஜிஆர்
இதனால் நமது எம்ஜிஆர் பத்திரிகையிலும் கூட எந்த நிகழ்ச்சியிலும் இல்லாததால் சசிகலா படம் பொதுக்கூட்ட பேனர்களில்தான் இருந்து வருகிறது. வெறுவழியே இல்லாமல் சட்டசபை நிகழ்வு, குடியரசு தின நிகழ்வு என ஓ.பன்னீர்செல்வம் படம்தான் முதல் பக்கத்தில் இடம்பெற்று வருகிறது.
மன்னார்குடி கணக்கு
இப்படியே போனால் கட்சிக்காரர்கள் கூட மறந்துவிடுவார்கள் என நினைத்துதான் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எம்பிக்கள் கூட்டத்தை கூட்ட சொன்னாராம் சசிகலா. இப்படி கூட்டுவதன் மூலம் தமக்கு போட்டியாக இருக்கும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு குடைச்சல் கொடுத்தது மாதிரியும் இருக்கும் என்பதும் மன்னார்குடி கணக்கு.
ஓபிஎஸ்-க்கு மிரட்டல்
பொதுவாக சட்டசபை கூட்டத் தொடருக்கு முதல் நாளோ அல்லது அன்று காலையோ கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் சசிகலா. இப்படி செய்தால் கட்சி தம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது; தன்னிச்சையாக செயல்பட நினைத்தால் தூக்கியடிக்கப்படுவீர் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல் விடுத்தது போலவும் இருக்கும் என்பதும் மன்னார்குடி கணக்கு.