சசிகலாவிடம் சரண்டர்! மத்திய அமைச்சராகும் தம்பிதுரை- திடீர் அறிக்கையின் பின்னணி!!
அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட தம்பிதுரை சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். தம்பிதுரைக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாலேயே அவர் போட்டியில் இருந்து விலகிய
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலர் பதவிக்கு பலமாக பேசப்பட்ட தம்பிதுரைக்கு மத்திய அமைச்சர் பதவி பேரம் பேசப்பட்டுள்ளதால் சசிகலாவுடன் மல்லுக்கட்டாமல் சமாதானமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தத்தளித்து வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவே அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்; ஆனால் தொண்டர்களோ சசிகலாவை ஏற்க மறுத்து வருகிறார்கள்.
தொண்டர்கள் எதிர்பார்ப்பு
மேலும் தம்பிதுரை, செங்கோட்டையன் போன்ற யாரேனும் ஒருவரை பொதுச்செயலராக்க வேண்டும் என்பதும் தொண்டர்களின் விருப்பம். ஆனால் தம்பிதுரையும் செங்கோட்டையனும் இப்போது சசிகலா பக்கம் நிற்கின்றனர்.
மத்திய பாஜக அரசில்...
அதிமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துவிடுவதற்கான காய்நகர்த்தல்களை பாஜக மேற்கொண்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்கும் தைரியம் தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு இல்லை. இதனால் வேறுவழியின்றி மத்திய பாஜக அரசில் அதிமுக பங்கேற்கவே கூடும்.
அமைச்சர் பதவி
அப்போது தம்பிதுரைக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுத் தருவதாக சசிகலா தரப்பில் 'பேரம்' பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே இருவரும் தற்போது சசிகலாவிடம் சரண்டர் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
திடீர் சரண்
இதனைத் தொடர்ந்தே சசிகலா தலைமையை ஏற்போம் என தம்பிதுரை 'சரண்டர்' அறிக்கை வெளியிட்டாராம். அந்த அறிக்கையில், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டிருக்கும் அதிமுகவையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக சசிகலா திகழ்கிறார் என்றெல்லாம் ஓவராக தம்பிதுரை புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.