சுவாதியை காப்பாற்ற முன்வராத மக்கள்.. போலீஸ் மீது பயமா? சட்டம் சொல்வது என்ன?
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சுவாதி, மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் நடந்தபோது, அடுத்த ரயிலை பிடித்து வேலைக்கு போவதில் மக்கள் கவனம் செலுத்தியுள்ளார்களே தவிர சுவாதிக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தவில்லை.
2 மணிநேரமாக சுவாதி உடல் பிளாட்பாரத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இவ்வாறு பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொண்டது ஏன்..? என்ற கேள்வி பலரது நெஞ்சையும் துளைத்துக்கொண்டுள்ளது.
மணியரசன் கருத்து
தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் இதை ஒரு உலகமயமாதலின் எதிரொலி என வர்ணிக்கிறார். நகரங்களில் அனைவருமே போட்டியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பம் மட்டுமே முக்கியம் என்ற மனநிலைக்கு உலகமயமாக்கல் கொண்டுவந்துள்ளது என்கிறார் அவர்.
நடக்குமா
25 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கொலையை தடுக்க முடியாவிட்டாலும், கொலையாளியை சக மக்கள் மடக்கி பிடித்திருப்பார்கள் என்பதையும் மணியரசன் சுட்டி காட்டுகிறார்.
கிராம கட்டமைப்பு கிரேட்
நீயா, நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்தும், உலகமயமாக்கலை குற்றம்சாட்டுகிறார். கிராமங்களில் புதிதாக ஒரு நபர் ஊருக்குள் வந்தாலே, நீ யார், எந்த ஊர் என பல்வேறு கேள்விகளை ஊர் பெரியவர்கள் கேட்பார்கள். புதிய நபரை சந்தேகத்தோடு ஊர் மக்கள் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருப்பார்கள்.
பிடிமானம் இல்லை
நகரம் என்ற அமைப்பே, யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம் என்ற அடிப்படையில் உருவானதுதான். இங்கு நீ யார் என்ற கேள்வியை இன்னொருவரை நோக்கி கேட்க முடியாது. ஏனெனில் அந்த நகரத்தின் மீது மக்களுக்கு பிடிமானம் கிடையாது என்கிறார் கோபிநாத்.
போலீஸ் தொந்தரவு
கொலையாளியை பிடிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டாததற்கு மற்றொரு முக்கிய காரணம், போலீசார் நம்மை தொந்தரவு செய்வார்களோ, கொலையாளிக்கு நாம் அடையாளம் தெரிந்துவிட்டால் சிக்கலாகிவிடுமோ என்ற அச்ச உணர்வு.
உச்சநீதிமன்றம் சொல்கிறது
அச்சம் காரணமாக பல பொதுமக்கள் போலீசாருக்கு போனில் கூட தகவல் தெரிவிக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால், சாட்சிகளை சங்கடப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சட்ட அறிவை மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதில் வக்கீல்கள் சங்கத்தினரும், குடிமை சங்கங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
விவரம் கேட்க கூடாது
சாலை விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கும் நபரிடம் பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விவரத்தையும் கேட்க கூடாது என்று கடந்த மார்ச் 5ம் தேதி அனைத்து மாநில போலீசாருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?
மருத்துவமனைகளுக்கும் விதிமுறை
மருத்துவமனை நிர்வாகமும், உதவி செய்தவர் விவரத்தை பெறக்கூடாது, அவரிடம் சிகிச்சைக்கு பணம் கேட்கக்கூடாது. மீறி கேட்கும் மருத்துவமனை மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெளிவாக கூறியுள்ளது உச்சநீதிமன்றம். கொலை வழக்குகளிலும் உச்சநீதிமன்றம், சாட்சிகள் பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
விவரம் இல்லை
வழக்கறிஞர் கிரிதர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து போலீசாருக்கே தெரியவில்லை. எனவேதான் சாட்சிகளை காவல் நிலையம் வரவைக்கிறார்கள். ஒரு நாள் முழுக்க கூட காத்திருக்க வைக்கிறார்கள் என்கிறார். சட்டம் பற்றிய, விவரம் தெரிந்தவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை, போலீசாரிடம், சுட்டிக்காட்டிவிட்டு தங்கள் வேலையை பார்க்க கிளம்பலாம்.
தெளிவு தேவை
உலகமயமாக்கலால் உருவாகியுள்ள கோழைத்தனம், சுயநலம், சட்டம் பற்றிய தெளிவின்மை போன்றவை இதுபோன்ற கொலையாளிகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது என்பதே சமூக நலவாதிகள் கருத்தாக உள்ளது.