ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு இதுதான் காரணம்.. ஜி.கே.வாசன் பேட்டி
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை விட பண நாயகம் தான் வெல்லும் எனவே இடைத்தேர்தலை தமாகா புறக்கணித்துள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: இடைத்தேர்தல் என்றாலே அங்கு ஜனநாயகத்தை விட பண நாயகம் தான் வெல்லும். எனவே தான் ஆர்.கே. நகர் தொகுதியில் த.மா.கா. போட்டியிடாமல் புறக்கணித்தது என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, மேட் தீபா, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாஜக, சிபிஎம் ஆகியவை வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக ஆகியவை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் போட்டியிடவில்லை என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட த.மா.கா. விரும்பவில்லை. இடைத்தேர்தல் என்றாலே அங்கு ஜனநாயகத்தை விட பண நாயகம் தான் வெல்லும். எனவே தான் ஆர்.கே. நகர் தொகுதியில் த.மா.கா. போட்டியிடாமல் புறக்கணித்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு காரணம் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டியே ஆகும்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் த.மா.கா. கூட்டணி சேரும். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தல்கள் நடக்காததால் உள்ளாட்சி பொறுப்புகளை அதிகாரிகளே கவனித்து வருகிறார்கள். இதனால் பல இடங்களில் மக்கள் பணி நடைபெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உள்ளாட்சி பணிகளை மேற்கொள்ளும்போது தான் மக்களுக்கான பணிகள் நடைபெறும்.
நீட் தேர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் மாணவர்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுகிறது. இதனால் மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மாநிலத்திலும் செல்வாக்கு பெற அந்த கட்சி முயற்சி மேற்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.