அளவான குடும்பமே வளமான வாழ்வு.. வீட்டுக்கு மட்டுல்ல.. பூமிக்கும் பொருந்தும்! #WorldPopulationDay
Recommended Video

சென்னை: பாரம் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது பூமிப் பந்து. மக்கள் தொகை நாளுக்கு நாள் பல்கிப் பெருகி வெடித்துக் கொண்டுள்ளது. மக்களிடையே மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வையும், குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.
குடும்பக் கட்டுப்பாடு மனித உரிமை என்பதே இந்த ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள் ஆகும். ஒவ்வொரு நாளும் பிரசவத்தின்போது மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை 800 ஆக இருக்கிறது. பிரசவ கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் இந்த ஆண்டு கொண்டாட்டத்தின்போது ஐ.நா. சபை வலியுறுத்துகிறது.
1989ம் ஆண்டு முதல் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று முதல் ஒவ்வொரு பொருளில் ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பிரசவத்தின்போது நடைபெறும் மரணங்கள்
நாள்தோறும் பிரசவ கால சாவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தற்போது பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 800 பேராக உள்ளது. இதைக் குறைக்கவும், தவிர்க்கவும் உரிய அக்கறை காட்ட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்துகிறது.

குடும்பக் கட்டுப்பாடு மனித உரிமை
இதன் பொருட்டே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் குடும்பக் கட்டுப்பாடு மனித உரிமை என்ற பொருளை இந்த ஆண்டு கையில் எடுத்துள்ளது ஐ.நா. சபை.

உடல் உறவு குறித்த விழிப்புணர்வு
உடல் உறவு குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க ஐ.நா. சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 15 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆண், பெண்களுக்கு செக்ஸ் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் சிறு வயதில் கர்ப்பமாவது, இளம் வயது பிரசவங்கள் போன்றவற்றைக் குறைக்க முடியும் என்று ஐ.நா. கருதுகிறது.

அதிகரிக்கும் சிறார் பிரசவங்கள்
உலகம் முழுவதும் சிறு வயதில் கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது. அதாவது கிட்டத்தட்ட 1.5 கோடி கர்ப்பவதிகளுக்கு 15 முதல் 19 வயதுக்குள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 40 லட்சம் பேருக்கு பல்வேறு காரணங்களால் பிரசவத்தின்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கல்வி அறிவு அவசியம்
இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க ஊரக மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த வளர் இளம் பருவத்தினருக்கு உரிய விழிப்புணர்வையும், கல்வி அறிவையும் வழங்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துகிறது. செக்ஸ் குறித்த விழிப்புணர்வு, பாலியல் நோய்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் ஐ.நா. சபை வலியுறுத்துகிறது.
அளவான குடும்பமே வளமான வாழ்வு என்பார்கள்.. அது வீட்டுக்கு மட்டுல்ல.. பூமிக்கும் பொருந்தும்!












Click it and Unblock the Notifications