கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த மனைவி கைது
சென்னை: சென்னையில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவரை, கூலிப் படையை வைத்து கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு பேசின் பிரிட்ஜ் காவல்நிலையம் அருகே சீனிவாசன் மர்மகும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார், சீனிவாசனின் மனைவி நாகஜோதியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தனது கணவர் தினமும் குடித்துவிட்டு ரகளை செய்ததால், கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக நாகஜோதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் இறந்த சீனிவாசனின் மனைவி நாகஜோதியையும் போலீசார் கைது செய்தனர்.