முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் 2வது மனவியோடு தலைமறைவு
தர்மபுரி: முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரையும், அவரது இரண்டாவது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரான சக்தி (எ) சக்திவேலின் மனைவி கல்பனா. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் மணமான இவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது, கல்பனா இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணை சக்திவேல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து தகவலறிந்த கல்பனா, நீதி கேட்டு ராதா வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கே, கல்பனாவுக்கு சக்திவேல், அவரின் தாய் சின்னபாப்பா, இரண்டாவது மனைவி ராதா மற்றும் அவரது பெற்றோர் கூன்மாரி, காந்தா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கல்பனா தர்மபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, கூன்மாரி, காந்தா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கல்பனா போலீசில் புகார் அளித்ததைக் கேள்விப்பட்டு தலைமறைவான சக்திவேல், அவரது இரண்டாவது மனைவி ராதா மற்றும் சின்னபாப்பா ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.