கணவனின் சந்தேக புத்தியால் குழந்தையுடன் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை!
சென்னை: சென்னையில் கணவர், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததால் அப்பெண் தன்னுடைய குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பெருங்களத்தூர் அன்னை இந்திரா நகர், 10 ஆவது தெருவைச் சேர்ந்தவர் தயாளன்.
இவருடைய மனைவி பிரியா. இவர்களது மகன் யோகேஷ். மகள் ஐஸ்வர்யா.
கார் டிரைவரான கணவர்:
தயாளன் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் வேலைக்கு வெளியில் சென்றால் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார் என்று தெரிகிறது.
நடத்தையில் சந்தேகம்:
இதனால் தனது மனைவியின் நடத்தையில் தயாளன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சமாதானப் படுத்திய பெற்றோர்:
இதில் கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த பிரியாவை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மீண்டும் தகராறு:
கடந்த புதன்கிழமை மாலை கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பிரியா கோபித்துக்கொண்டு பெண் குழந்தை ஐஸ்வர்யாவை தூக்கிக்கொண்டு வெளியில் சென்றார்.
தேடிய உறவினர்கள்:
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால் தயாளன் மற்றும் உறவினர்கள் பிரியாவையும், குழந்தையையும் தேடி வந்தனர்.
பிணமாய் மிதந்த மனைவி, குழந்தை:
இந்தநிலையில் அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள வயல்வெளி கிணற்றில் வியாழக்கிழமை காலை பிரியாவும், அவரது மகள் ஐஸ்வர்யாவும் பிணமாக மிதந்தனர்.
கதறி அழுத கணவர்:
இதை பார்த்த தயாளன் கதறி அழுதார். இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
உடல்கள் மீட்பு:
தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த தாய், மகள் இருவரின் உடல்களையும் மீட்டனர். போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை:
நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரியா தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.