கள்ளக் காதல் விவகாரத்தில் சென்னை தொழிலதிபர் படுகொலை- அரிவாளால் கழுத்தை அறுத்த மனைவி கைது!
சென்னை: சென்னை பிராட்வேயில் தொழிலதிபர் அக்பர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவரது மனைவி பாத்திமாமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த இரும்பு வியாபாரி அக்பர் (வயது 54). அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் நேற்று படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
காட்டிக் கொடுத்த மோப்பநாய்
அப்போது அழைத்துவரப்பட்ட மோப்ப நாய் சோனா வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது. இதனால் கொலையாளிகள் அதே தெருவில்தான் இருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர்.
முன்னுக்குப் பின் முரண்
இக் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அக்பர் மனைவி பாத்திமாமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்காதல் விவகாரம்
அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமாமுத்து ஒப்புக்கொண்டார். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
கைவிட மறுப்பு
சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமாமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். ஆனால் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமாமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
திருமணம் செய்வேன் என மிரட்டல்
அப்போது அக்பர், பாத்திமாமுத்துவை அடித்ததுடன் கள்ளக்காதலியை திருமணம் செய்வேன் என மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி பாத்திமாமுத்து, அக்பர் தூங்கியவுடன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்தார்.
நாடகம்
அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார். காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர்.