தினகரன் ஜெயிச்சுட்டார்... அதிமுகவில் இணைப்பா அல்லது வளைப்பா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். எங்கள் பக்கம் அனைவரும் வருவார்கள் என்று கூறுகிறார் தினகரன். கட்சி இணையுமா? காட்சிகள் மாறுமா பார்க்கலாம்.
சென்னை: அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். இரட்டைஇலைக்கு போடாவிட்டாலும் திமுகவிற்கு போட மாட்டோம் என்று கூறி குக்கரில் குத்தி தினகரனை ஜெயிக்க வைத்துள்ளனர் ஆர்.கே.நகர்வாசிகள். தினகரனின் வெற்றி அதிமுகவில் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ளது.
அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள் என்று கூறி வருகிறார் தினகரன். அதே போல எங்கள் ஸ்லீப்பர் செல்கள் இனி செயல்பட ஆரம்பிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் தினகரன்.
ஆனால் அதெல்லாம் நடக்காது நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் யாரையும் வளைக்க முடியாது என்று கூறியுள்ளனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்.

ஒதுக்கி வையுங்கள்
இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது சில எம்எல்ஏக்களை அசைத்து பார்த்துள்ளது. ஒரு எம்பி நேரடியாகவே சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ், தனது பதிவில், தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர். தலைவர்கள் மட்டுமே பிரிந்துள்ளனர். அனைவரும் தங்களின் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,அம்மாவின் கனவை நிறைவேற்ற இணைந்திடவேண்டும் என்று கூறியுள்ளார்.

அண்ணன் தினகரன்
அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பின்னர் ஜெயலலிதாதான். அம்மா என்று அழைத்தனர் அதிமுகவினர். சில மாதங்கள் சின்னம்மா என்று கூறி வந்தனர். சசிகலா சிறைக்குப் போகவே காட்சிகள் மாறின. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஓபிஎஸ் அணியோடு இணைந்தது ஈபிஎஸ் அணி. அதே நேரத்தில் தினகரன் தலைமையில் ஒரு தனி அணி உருவானது.

மைனாரிட்டி அரசா?
குதிரை பேர அரசு என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்ட, மைனாரிட்டி அரசு என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார். இப்போது இடைத்தேர்தலில் ஜெயித்து சட்டசபைக்கும் செல்லப்போகிறார் டிடிவி தினகரன். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் சிங்கிளாக சட்டசபைக்கு செல்லும் தினகரனால் தினசரியும் கூத்துக்கள் அரங்கேறும்.

தினகரன் பக்கம் சாய்வார்களா
இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். எனவே, சின்னம் யாரிடம் உள்ளது என்பது பொருட்டல்ல. யாரை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதுதான் முக்கியம் என்று கேட்டுள்ளார் தினகரன். திமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஆர்.கே.நகரில் தொடங்கும் என்று ஏற்கெனவே சொன்னேன், அது நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆட்சி கலைப்பா?
இன்னும் இரண்டு மாதத்திற்குக் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். திமுகவின் கனவு, ஆசையும் அதுதான். தினகரன் அதை நிறைவேற்றப் போகிறாரா? அல்லது எம்எல்ஏக்களை தன் பக்கம் வளைத்து முதல்வராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போதய சூழ்நிலையில் அதிமுகவின் உடைந்த அணிகள் இணையுமா? அல்லது தினகரன் பக்கம் வளையுமா என்பதே கேள்வியாகும்.












Click it and Unblock the Notifications