அன்புமணி பாமகவிலிருந்து நீக்கமா? தைலாபுரத்தில் ராமதாஸ் சொன்ன பரபரப்பு தகவல்
தைலாபுரம்: அன்புமணி ராமதாஸை பாமகவிலிருந்து நீக்குவீர்களா என்ற கேள்விக்கு, வியாழக்கிழமை பதில் அளிக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் இருவரும் யாருக்கு செல்வாக்கு என்பதை அறிய கடந்த 3 தினங்களாக மாற்றி மாற்றி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றும் தனது ஆதரவாளர்களுடன் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் திலகபாமா உள்ளிட்டோரை பதவி நீக்குவது போல் அன்புமணி ராமதாஸையும் நீக்குவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராமதாஸ் கூறுகையில், அதை வியாழக்கிழமை சொல்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும்.
பாமகவின் மகளிர் மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும். யாரையும் வரக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். 46 ஆண்டுகளாக பாமகவை நான்தான் இயக்கி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. என்னை யாரும் இயக்கவும் முடியாது.
என் பொது வாழ்வு நீண்ட பயணம் கொண்டது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை 92 ஆயிரம் கிராமங்களுக்கு நான் பயணித்துள்ளேன். அப்போதெல்லாம் நான் உங்களை (பத்திரிகையாளர்கள்) சந்தித்து பேட்டி அளித்துவிட்டுத்தான் என் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.
பாமகவுக்கு சிலர் வருவாங்க, சிலர் போவாங்க என்பதை அவருக்கே உரிய ஸ்டைலில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் பாமக பொருளாளர் பதவியில் சிறுபான்மையினரை நியமிக்கவே திலகபாமாவை நீக்கினேன். எனக்கும் அன்புமணிக்கும் ஏற்பட்ட பிணக்கால் நிர்வாகிகளிடம் எந்த குழப்பமும் இல்லை.
ஒவ்வொரு கட்சியிலும் குடும்பத்திலும் நடப்பதுதான் பாமகவிலும் நடக்கிறது. இந்த விவகாரத்தை நாங்களே பெரிதுப்படுத்தவில்லை. பாமக நிர்வாகிகள் நியமனம், நீக்கம் விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம். சுதந்திரமாக செயல்படுவது அன்புமணியின் உரிமை என்றார்.
பாமக நிர்வாகிகளை தலைவர் பொறுப்பில் உள்ள தன்னால் மட்டுமே நீக்க முடியும் என அன்புமணி கூறியது குறித்து ராமதாஸிடம் கேட்ட போது, சட்ட விதிகளை இன்னும் பார்க்கவில்லை. சட்டவிதிகளை பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன் என்றார்.
அன்புமணியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு உலகில் பல அதிசயங்கள் நடக்கிறது. அது எப்போது எப்படி நடைபெறும் என சொல்ல முடியாது என ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications