கூட்டணி இருக்கட்டும்: முதலில் கோஷ்டிகளை இணைத்து ஒரே கட்சியாகுமா காங்கிரஸ்?
சென்னை: காங்கிரஸ் பிற கட்சிகளை ஒன்று சேர்த்து கூட்டணி அமைப்பதற்கு முன்பு தனது கட்சியில் உள்ள கோஷ்டிகளை ஒன்று சேர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த திமுக தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
பாஜகவோ திமுக, அதிகமுக இல்லாத ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எந்த கட்சிகளை சேர்த்து கூட்டணி உருவாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் முதலில் காங்கிரஸார் ஒற்றுமையாக, ஓரணியில் நிற்பார்களா என்று பலரும் கேலி பேசும் நிலையில்தான் காங்கிரஸார் இன்றும் உள்ளனர்.
கூட்டணி கிடக்கட்டும்
காங்கிரஸ் பிற கட்சிகளை சேர்த்து புதிய கூட்டணி அமைப்பது இருக்கட்டும். முதலில் அந்த கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டிகளை அதனால் ஒன்று சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.
எத்தனை எத்தனை கோஷ்டிகளடா
காங்கிரஸில் கோஷ்டிகள் எத்தனை கோஷ்டிகளடா என்று கூறும் அளவுக்கு கோஷ்டிகள் உள்ளது. இதில் ஒரு கோஷ்டிக்கு மற்றொரு கோஷ்டியை பிடிக்கவே பிடிக்காது. தமிழகத்தில் கட்சி நிலைமை இப்படி இருக்க பிற கட்சிகளை ஒன்று சேர்த்து கூட்டணி அமைப்பது எளிதானதா என்ன?
விரல் போதாது
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கோஷ்டிகளை விரல் விட்டு எண்ண ஆரம்பித்தால் விரலே போதாது, காலில் உள்ள விரல்களையும் சேர்த்தாலும் கூட போதாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜி.கே.வாசன்- 'ஜி.எம்.' கார்த்தி
கட்சியிலேயே பெரிய கோஷ்டி மத்திய அமைச்சர் ஜி. கே. வாசனின் கோஷ்டி தான். இந்த கோஷ்டிக்கும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் கோஷ்டிக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம் தான்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்- தங்கபாலு
வாசன் கோஷ்டிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கோஷ்டிக்கும் எந்த காலத்திலுமே ஆகவே ஆகாது. அதேபோல தங்கபாலு தனிக் கோஷ்டியாக வலம் வருகிறார். வசந்த் டிவி வசந்தகுமாரும் தனி ஆவர்த்தனம் செய்கிறார். அன்பரசு என்று ஒரு தலைவரும் இருக்கிறார்.
கட்டிப் புரண்டு
கட்சி கூட்டம் முதல் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வரை கோஷ்டி மோதல் நடந்து கட்சிப் பெயர் கிழிந்து நாறியுள்ளது. மோதல்களின் போது வேட்டி கிழிப்பு, சட்டை கிழிப்பு, இருக்கைகள் உடைப்பு, கட்டிப் புரண்டு சண்டை ஏன் அரிவாள் வெட்டு வரை கூட விளையாடி பார்த்துள்ளனர் காங்கிரஸார்.
உங்களுக்குள் முதலில் கூட்டணி வையுங்கப்பா
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை இப்படி பரிதாபமாக உள்ளது. அதனால் கட்சி தலைமை முதலில் அத்தனை கோஷ்டித் தலைவர்களுடனும் பேசி, அவர்களுக்குள் முதலில் கூட்டணியை ஏற்படுத்தி பின்னர், வேறு கட்சியுடன் கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டலாம். இல்லை என்றால் கூட்டணி விவகாரத்திலும் இந்த கோஷ்டியினர் கட்டிப் புரண்டு கொண்டு தான் இருப்பார்கள்.