எப்ப ஜெயிலுக்குப் போவார் எடப்பாடி பழனிச்சாமி?.. சசிகலாவைப் பார்க்க!
இப்போதைக்கு ஜெயில் பக்கம் வர வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலா உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டதால் தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்க்க இப்போதைக்கு பெங்களூர் சிறை பக்கம் வர வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலாவிடமிருந்து உத்தரவு வந்திருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விட்ட சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். சாதாரண கைதியாக அவரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று சசிகலாவை அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்று பார்த்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பார்க்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இருப்பினும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று எடப்பாடியாருக்கு உத்தரவு போயுள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது முதல்வர் பதவியில் இருப்பதால் ஜெயிலுக்குவருவதை தள்ளிப் போடுமாறும், இப்போதைக்கு இங்கு வருவதை தவிர்க்குமாறும் அவருக்கு சசிகலா தரப்பு உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதை ஏற்று போகாமல் இருப்பாரா அல்லது சின்னம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கிளம்பிப் போவாரா என்பது தெரியவில்லை.
முதல்வர் எடப்பாடி இன்றுதான் தலைமைச் செயலகம் சென்று தனது முதல்வர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா பயன்படுத்திய அறை, அவரது இருக்கை ஆகியவற்றை அவர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் உடனேயே அவர் ஜெயிலுக்குப் போவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications