இரட்டை இலையை வாங்குங்க, வாங்காம போங்க... எங்களை மழையிலேருந்து காக்க ஆக்ஷன் எடுத்தே ஆகனும்!
வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.
சென்னை : வடகிழக்குப் பருவமழை தனது தீவிர முகத்தை காட்டத் தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் 3 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு ஏற்ப முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2015 சென்னை மக்களை கண்ணீரில் மிதக்க விட்டது மாமழை. ஒரே இரவில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழையின் எதிரொலியாக எந்த முன்அறிவிப்பும் இன்றி சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பராம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
சென்னை விமான நிலையம், கூவம் நதிக்கரைகளான அடையாறு, சைதாப்பேட்டை கோட்டூர்புரம், மேற்கு மாம்பலம் என்று வெள்ள நீர் கிடைத்த திசையில் எல்லாம் ஆறாக அடித்தோடியது. புறநகர்ப் பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி உடைந்ததில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசு
சென்னை மக்களால் மறக்க முடியாத இந்த வெள்ள பாதிப்பிற்கு அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்படவில்லை. மேலும் பெருமழையைத் தாங்கும் அளவிற்கு ஏரிகளை பொதுப்பணித்துறையினர் பலப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

குண்டும் குழியுமான சாலைகள்
சென்னையின் பல இடங்களில் மழை நீர் வெளியே செல்ல போதிய வழித்தடங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை. சில இடங்களில் அமைக்கப்பட்ட கால்வாய்களும் உடைந்த நிலையில், அடைப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, சென்னை புறநகர் பகுதிகளாக வேளச்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடியாததால் அந்த பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இன்று ஒரு நாள் மழைக்கே குண்டும் குழியுமான சாலைகளால் காலையில் வீட்டில் இருந்து அலுவலகம் புறப்பட்டவர்கள் மதிய சாப்பாட்டிற்குத் தான் அலுவலகம் சென்று சேர முடிந்துள்ளது. ஒரு நாளைக்கே இப்படி என்றால் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி பலரின் மனதிலும் இன்று காலை முதல் ஓடுகிறது.

நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா?
மழையின் போது நடைபெறும் மற்றொரு மோசமான விஷயம் சாலையோரங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே விட்டு செல்வதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள். இதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக என்பதும் தான் தற்போதைய தேவையாக உள்ளது.

அரசின் உதவிப் பக்கங்கள் உருவாக்கப்படுமா?
2015 மழையின் போது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதில் முக்கிய பங்கு வகித்தது சமூக வலைதள பக்கங்கள். எனவே அரசு மழை தொடர்பான மக்களின் புகார்களை கேட்டறிந்து கொள்ளவும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் தனியான டுவிட்டர், வாட்ஸ் அப் எண்களை அறிவிக்குமா என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாதுகாத்தே ஆகனும்
மொத்தத்தில் சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சொல்லப்போனால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி வாங்குகிறதோ இல்லையோ வடகிழக்கு பருவமழையில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது தான் வாக்களித்த மக்களுக்கு செய்யும் நல்ல விஷயம் என்பதை உணர்ந்து அரசு செயல்படுமா?












Click it and Unblock the Notifications