கேரளாவோடு நட்பு பாராட்டும் கமல் சாரே!.. கேரளா கொட்டும்.கோழி கழிவு பற்றி ஒரு டுவீட் போடுவீங்களா?
கேரளாவோடு நட்போடு இருக்கும் நடிகர் கமல்ஹாசன் கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளை எதிர்த்து குரல் கொடுப்பாரா?
கோழிவிளை (கன்னியாகுமரி) கேரளாவில் இருந்து தமிழக எல்லைப் பகுதியில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளை தடுத்து நிறுத்த முதல்வர் பினராயி விஜயனோடு நட்பு பாராட்டும் நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுப்பாரா?
தமிழக எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவது என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. நேற்றைய தினம் கேரளாவிலிருந்து தூத்துக்குடி வந்த மினி டெம்போ வாகனம் ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடுரோட்டில் பழுதாகி நின்றது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, வாகனத்திலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து களியக்காவிளை போலீசார் வாகனத்தை சோதனையிட்டதில் அதிதல் கேரளாவிலிருந்து கோழி இறைச்சிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து டெம்போவை ஓட்டி வந்த ஓட்டுநர் ராமசெல்வராஜை போலீசார் கைது செய்தனர்.
தடுத்து நிறுத்திய கேரளா
வாகனத்தை அப்புறப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் வரவழைத்து மற்றொரு வானம் மூலம் கேரளாவிற்கே கழிவுகளை திருப்பி அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கோழிவிளை சோதனைச் சாவடியில் கேரள மாநில போலீசார் அந்த வாகனத்தை தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.
திருப்பி அனுப்ப நடவடிக்கை
இதனால் தமிழக, கேரள எல்லையில் இரு மாநில போலீசாருக்கும இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் கேரள போலீசார் விடாப்படியாக வாகனத்தை அனுமதிக்காததால் எல்லையிலேயே வாகனம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அவர்கள் மாநிலத்திற்கே திருப்பி அனுப்புவதற்கான சட்டநடவடிக்கையில் இறங்கியுள்ளனர் தமிழக போலீசார்.
முற்றுப்புள்ளி கிடையாதா?
எத்தனை முறை எதிர்ப்பு தெரிவித்தாலும் கேரள மாநிலத்தவர்கள் கோழி இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைப் பகுதியில் கொட்டுவதை நிறுத்தியபாட்டில்லை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாதா என்று எல்லையோர மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கோரிக்கை வைப்பாரா?
கேரள முதல்வருடன் நட்பு பாராட்டி வருபவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன். இந்த நட்பை காரணமாக வைத்தே கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே என்று கேட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர்.
கமல் மீது நம்பிக்கை
அவர் பதிவிட்டுள்ள கருத்தில் கேரளாவில் இருந்து கோழி கழிவு கொண்டுவந்து குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் கொட்டப்படுகிறது. இது தொடர்பாக கேரள முதல்வரிடம் நடிகர் கமல்ஹாசன் பேசுவார் என்று நம்புவோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மண் காப்பாற்றப்பட வேண்டும்
தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு டுவிட்டரில் கருத்து பதியும் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இது குறித்து டுவீட் போடுவாரா. அரசியலுக்கு மக்கள் பணியாற்ற வரும் கமல்ஹாசன் அவர்களை மண்ணை காக்க வேண்டியதும் கடமை தானே.