எஸ்.வி.சேகரை கைவிட்ட பாஜக.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழிசை உறுதி
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது பாஜக மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது பாஜக மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது.
இந்த நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் மீது பாஜக கட்சி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம் என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் ''எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்த புகார் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையில் உள்ளது. எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்.குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றுள்ளார்.
ஏற்கனவே போலீஸ் தேடிக்கொண்டு இருக்கும் எஸ்.வி.சேகரை தற்போது அவரது கட்சி தலைமையும் கைவிட்டுள்ளது. இது அவருக்கு இன்னும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.