பொங்கலுக்கு ஊருக்கு போலாமா வேண்டாமா?... டிவியையே பார்த்து காத்திருக்கும் மக்கள்!
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சொந்த ஊர் செல்லலாமா வேண்டாமா என்ற கவலையில் உள்ளனர் மக்கள்.
சென்னை : போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லலாமா வேண்டாமா என்று கவலையில் உள்ளனர் மக்கள். தனியார் பேருந்துகளிலும் வழக்கமாக பயணிக்கும் கட்டணத்தை விட 4 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, இவையெல்லாம் அரசின் கவனத்திற்கு வந்ததா இல்லையா என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
வருடம் முழுவதும் பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கி இருந்தாலும், பண்டிகை நாட்களில் சொந்த ஊர் சென்று குடும்பத்தினர், உறவினர்களுடன் நேரத்தை கழிப்பதையே பலரும் விரும்புவர். அதிலும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாள் நகரங்களை விட கிராமங்களிலேயே களை கட்டும். இந்த 3 நாள் விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஆண்டு முழுவதும் காத்திருக்கின்றனர் மக்கள்.
வழக்கமாக பொங்கல் பண்டிகை விடுமுறை என்றால் முன்கூட்டியே எல்லா திட்டங்களும் போடப்பட்டு விடும். இதற்காகவே பேருந்து, ரயில் முன்பதிவுகளும் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அதிக கூட்டம் இருந்தால் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு அனைத்துமே மக்களை கைவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே விடுமுறைக்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அன்றாட போக்குவரத்துக்கே அல்லாடும் நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்விக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
முன்பதிவில்லாமல் பயணிக்கலாம்
கடந்த 2 நாட்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இந்த ஆண்டு நடைபெறவேயில்லை. மாறாக சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டாம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 இடங்களில் காத்திருந்து செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது. உள்ளூரில் பயணிக்கவே தற்காலிக ஓட்டுனர்களின் கையில் உயிரை கொடுத்துவிட்டு பயந்து பயந்து பயணிக்கின்றனர் மக்கள்.
சிரமப்படும் மக்கள்
இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் எப்படி இயக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பதிவு செய்தாலே அரசுப் பேருந்துகளில் பயணிக்க மக்கள் கடும் சிரமத்தை சந்திப்பர், இந்நிலையில் முன்பதிவின்றி பேருந்தில் பயணிக்கலாம் என்று அரசு கூறியுள்ளதால் நிச்சயம் மக்களுக்கு இந்த பயணம் ஆபத்தானதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.
தனியார் பஸ்களின் கட்டண கொள்ளை
மற்றொரு புறம் அரசுப் பேருந்து ஸ்டிரைக்கை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் 4 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. வழக்கமாக பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது வழக்கமான விஷயம் தான். அப்போதெல்லாம் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து வந்தது.
ஏன் கண்டுகொள்ளவில்லை?
இந்நிலையில் தற்போது தனியார் பேருந்துகள் வசூலிக்கும் இந்த கட்டணம் என்பது அரசின் கவனத்திற்கு செல்லவில்லையா. ஏற்கனவே போக்குவரத்துக்கு பேருந்து இல்லாமல் சிரமப்படும் மக்களின் கஷ்டங்களை லாபமாக்கிக் கொள்ளும் தனியார் பேருந்து நிறுவனங்களை அரசு ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது.
தவிப்பில் மக்கள்
பயணிகள் அதிக அளவில் வந்தால் அதற்கு ஏற்ப டிக்கெட் விலையை மாற்றிக் கொள்வதற்கான உரிமையை தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு யார் தந்தது என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில் நாளை முதல் விடுமுறை தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு எப்படி செல்வது, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றாவது முடிவுக்கு வருமா என்று டிவி சேனல்களையே பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள்.