"காணாமல்" போன காற்று.. மின் உற்பத்தி மடமடவென சரிவு
நெல்லை: ஆடி மாதத்தில் வீசும் காற்று திடீரென குறைந்து விட்டதால் காற்றாலை மின் உற்பத்தி சரிந்து விட்டது. இதனால் மின் வாரியத்தினர் கவலையில் உள்ளனர்.
தமிழகம் மின் உற்பத்தியில் தேவைக்கு ஏற்ப என்னும் நிலையை இன்னும் எட்ட முடியாமல் திணறி வருகிறது. மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மின் உற்பத்தியோ குறைந்து வருகிறது.
தமிழகத்தில் மின் உற்பத்தி ஆதாரங்களில் காற்று காலங்களில் காற்றாலை மின்சாரம் மிக பஙகு வகிக்கிறது. நெல்லை மண்டலத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகளில் இருந்து காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி ஆனாலும் அவற்றை உபயோகப்படுத்த போதிய மின் பாதை இல்லை.
தென்மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம் புதிய மின் பாதை மூலம் வட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அதற்கும் மேல் கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை கொ்ண்டு செல்ல வழி இல்லாததால் அவ்வப்போது காற்றாலைகளை நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆடி காற்று வீசியதால் காற்றாலை மின் உற்பத்தி சுமார் 3 ஆயிரம் மெகா வாட்டை எட்டியது. ஆனால் கடந்த இரண்டு தினஙகளாக ஆடிக்காறறு குறைந்து போய் விட்டது. இதனால் மின் உற்பத்தியும் சரிவடைந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2296 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்தது. இது அதிகாலை 1066 மெகா வாட்டாக சரிந்து போய் விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்தாலும் அனல் மின்சாரம் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்கள் கை கொடுத்து வருகிறது.
மின் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளியிடத்தில் இருந்து மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 675 மெகா வாட் கொள்முதல் செய்த நிலையில் தற்போது 1323 மெகா வாட் மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மின் வாரியத்தினர் கவலையில் உள்ளனர்.