ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார்? இன்னும் 2 நாட்களில் அம்பலமாகும்.. ராமதாஸ் சொன்ன மேட்டர்!
விழுப்புரம்: "ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்னும் 2,3 நாட்களில் அம்பலத்துக்கு வரும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவர் செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்த ராமதாஸ், தலைவர் பதவியில் தான் தொடர்வதாக தெரிவித்தார். அன்புமணி மீது ராமதாஸ் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனால் பாமகவில் பெரும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ராமதாஸின் இல்லத்தில் கடந்த 9 ஆம் தேதி, அவரது இருக்கையில் ஒரு ஒட்டுக் கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டது. ராமதாஸ் இல்லாத நேரத்தில் இது வைக்கப்பட்டதாகவும், சமூக விரோத சக்திகளால் வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் கிளப்பப்பட்டது.
விருத்தாசலத்தில் நடந்த வன்னியர் சங்க பொதுக் குழுவில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், "நான் வசிக்கும் தைலாபுரம் இல்லத்தில், என் இருக்கைக்கு அருகே லண்டனிலிருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது யார் வைத்தார்கள்? என தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஆய்வறிக்கை வந்த பின் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பாமக தலைமைச் செயலாளர் எம். அன்பழகன் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் சைபர் க்ரைம் போலீசார் மற்றும் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் போலீசார் இன்று (ஜூலை 17) விசாரணை மேற்கொண்டனர். இதில் முதற்கட்டமாக ராமதாஸ் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 8 போலீஸ் அதிகாரிகள் இங்கு வந்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இன்னும் 2,3 நாட்களில் அம்பலத்துக்கு வரும்" என்றார்.
மேலும் அவர், ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது ஏன் நீங்களாக இருக்கக்கூடாது என்று செய்தியாளார்களிடம் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். மேலும் பேசுகையில், "மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வரலாம், வரமாலும் போகலாம். பாமக மாநாட்டு பிரசுரத்தில் அன்புமணி பெயர் மற்றும் படம் வரும்.. வரலாம்" என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications