அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் சுருட்டிய "பரதநாட்டிய" பெண் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரைப் பயன்படுத்தி ரூ.50 லட்சம் சுருட்டிய பரத நாட்டிய பெண்மணியை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் தனது பெயர் ஜோதிலட்சுமி(வயது 35) என்றும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனது சொந்த ஊர் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும், ஜோதிலட்சுமி, புவனேஸ்வரி, ஜெயஜோதி, ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் மோசடி ராணியாக வலம் வந்தவர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது உண்மையான பெயர் எது என்று யாருக்கும் தெரியவில்லை. இவர் மீது தற்போது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மோசடிராணியாக மாறிய பெண்
பரதநாட்டிய நடனப்பெண்மணியாக அரசு விழாக்களில் கலந்து கொண்டு பேரும், புகழும் பெற்றுள்ளார் இந்த நடன ராணி. ஆனால் திடீரென்று மோசடிராணியாக மாறியது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.
அரசு வேலை
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ.5 லட்சத்தை வாங்கி ஏப்பம் போட்டுள்ளார். இந்த புகாரில் மைலாப்பூர் போலீசாரால், கடந்த 29-9-2011 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர் மீது, மீண்டும் அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன.
சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சி
சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சி நடத்த அழைத்து செல்வதாக கூறி, சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகளிடம் ரூ.10 லட்சம் சுருட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில், இவரை கடந்த 19-6-2014 அன்று வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.
ரூ 50 லட்சம் சுருட்டல்
அடுத்து அரசு வேலை வாங்கி தருவதாகவும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை தனக்கு தெரியும் என்றும், 27 பேரிடம் லட்சக்கணக்கில் சுருட்டி இருக்கிறார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அனந்தநாயகி தனது சகோதரியின் மகன் வேலைக்காக, ரூ.2 லட்சத்தை ஜோதிலட்சுமியிடம் கொடுத்து ஏமாந்துள்ளார். மொத்தம் ரூ.50 லட்சத்தை சுருட்டியதாக ஜோதிலட்சுமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
3 வதுமுறையாகக் கைது
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 3-வது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோதி லட்சுமியை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை 3-வது முறையாக கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
செலவழித்து விட்டேன்
தற்போது புழல் பெண்கள் சிறையில் உள்ள ஜோதிலட்சுமி தனக்கு திருமணமாகி கணவர், குழந்தைகள் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மோசடி பணத்தை தான் ஆடம்பரமாக செலவு செய்து, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக அவர் போலீசாரிடம் கூறி இருக்கிறார்.
ஏமாற்றிய பணம் எங்கே
எனினும் ஜோதிலட்சுமி அந்தப் பணத்தில் சிங்கப்பூரில் சொத்துக்கள் ஏதாவது வாங்கி போட்டிருக்கலாம், என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. ஜோதிலட்சுமியிடம் ஏமாந்தவர்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications