தான் வாங்கி வைத்த மதுவை குடித்த மனைவியை கொலை செய்த கணவர்
வேலூர்: அரக்கோணத்தில் தான் குடிக்க வாங்கி வைத்த மதுவை தனது மனைவி குடித்ததால் அவரை செங்கல் சூளை தொழிலாளி அடித்துக் கொலை செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கடம்பநல்லூரைச் சேர்ந்தவர் அங்கமுத்து(47). அவர் பரமேஸ்வரமங்கலத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அவருக்கும் மலர்(37) என்ற பெண்ணும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவனும், மனைவியும் ஒரே சூளையில் பணியாற்றினர்.
அங்கமுத்துக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அங்கமுத்து கடையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து குடிப்பார். நேற்று முன்தினமும் சூளையில் வேலை முடிந்து வீடு திரும்பியபோது மது பாட்டில் வாங்கி வந்தார். அந்த பாட்டிலை பார்த்த மலருக்கு மது அருந்தும் ஆசை வந்தது. இதையடுத்து அவர் பாட்டிலை திறந்து மதுவை குடித்துவிட்டார்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அங்கமுத்து தனது மனைவியை அடித்ததுடன் கழுத்தில் மிதித்து அழுத்தினார். இதில் மலர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை பார்த்த குழந்தைகள் கதறி அழுதன. அதன் பிறகு அவர் நேராக காவல் நிலையத்திற்கு சென்று தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டு சரண் அடைந்தார்.
உடனே போலீசார் அங்கமுத்துவின் வீட்டுக்கு சென்று மலரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அங்கமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.