நள்ளிரவில் கேட்ட பெண் குரல்.. வீடு வீடாக போய் கதவை தட்டி.. சிசிடிவி காட்சி ஷாக்! - போலீசார் விளக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது. இதுதொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் நேற்று (நவம்பர் 21) அதிகாலை 2 மணியளவில் பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில், பல்லவன் வங்கி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 30 வயது கொண்ட பெண் ஒருவர் திடீரென அப்பகுதியில் இருந்த வீடுகளுக்குள் நுழைவதற்காக முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அவர் தரையில் விழுந்து அடிபட்டு காயம் அடைந்ததாக கூறி, தனக்கு உதவி செய்யுமாறு என கூச்சலிட்டார். அப்பகுதியில் வீடுகளின் கதவுகளை தட்டி திறக்கும்படி அழைத்ததுடன், அங்கிருந்த பொருட்களை எடுத்து சத்தம் எழுப்பியும் உளார். வீட்டு உரிமையாளர்கள் யாரும் கதவைத் திறக்கவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது. அந்தப் பெண் உண்மையாகவே உதவி கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்கான திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சம்பந்தப்பட்ட பெண் கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எனவும், கடந்த 20 ஆம் தேதி இரவு அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, அவரது கணவரும், உறவினர்களும் அடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் அவர் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால், பர்கூர் எம்ஜிஆர் நகர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உதவி கேட்டுள்ளார். அப்பகுதி மக்கள் யாரும் கதவை திறக்காத நிலையில், பர்கூர் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே இது சம்பந்தமாக கந்திகுப்பம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோ பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications