சொல்ல சொல்ல கேட்காமல் குடிக்கும் கணவர்கள்.. பாட்டில்களை உடைத்து பரபரப்பை கிளப்பிய மனைவிகள்!
காலி மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
Recommended Video
திருத்துறைப்பூண்டி: பலமுறை புகார் அளித்தும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தாத போலீசாரை கண்டித்தும், எவ்வளவு திட்டியும் குடிப்பதை நிறுத்தாத கணவனை கண்டித்தும் பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது கொருக்கை ஊராட்சி பகுதி. இங்கு எங்குமே டாஸ்மாக் கடையே இல்லை. இதனால் இப்பகுதி இல்லத்தரசிகள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் குடிமகன்களுக்கு இது சிரமமாயிற்றே? தங்கள் பகுதியில் டாஸ்மாக் இல்லாததால், திருத்துறைப்பூண்டிவரை சென்று அங்கிருந்த டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வந்து குடித்து வந்தனர்.
இப்படி தினமும் இவ்வளவு தூரம் போய் மதுபானங்களை வாங்கி வருவது சிரமமாகவும் தெரிந்தது. இதனால் கொருக்கை பகுதியிலேயே சிலர் தங்களது வீடுகளில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்துவிட ஆரம்பித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்களும், மதுபானம் விரும்பாத ஆண்களும் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் கொருக்கை பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். அப்போது தங்களது வீடுகளில் கணவர்கள் கள்ளத்தனமாக வாங்கி குடித்து போட்டிருந்த காலி பாட்டில்களை சேகரித்து கொண்டு வந்தனர். நடுரோட்டில் அனைத்தை காலி மது பாட்டில்களையும் போட்டு உடைத்தனர். ஒரே நேரத்தில் எல்லோரும் மது பாட்டில்களை உடைக்க தொடங்கியதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போலீசாரை கண்டதும் பெண்கள், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். பின்னர் பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டவிரோதமாக மது விற்பது தடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து போலீசார் மதுபானம் கள்ளத்தனமாக விற்றதாக கூறப்பட்ட வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்ற 4 பேரும் அப்போ கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்றாலும், கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பெண்கள் ஆவர்!!!