நெல்லையில் தொழிலாளி மர்ம மரணம்- பதட்டம், போலீஸ் குவிப்பு
திருநெல்வேலி: நெல்லை அருகே தொழிலாளி காயங்களுடன் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி மெயின் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ எதிர்புறம் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கடையின் படிக்கட்டில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் காவல் கிணறு அம்பேத்கார் நகரை சேர்ந்த சின்னதம்பி என்பது தெரிய வந்தது. இவர் திருவிழா காலங்களில் ராட்டினம் சுற்றுதல் மற்றும் வீடுகளுக்கு வெள்ளையடித்தல் தொழில் செய்து வந்தார்.
மனைவியை பிரிந்து வாழும் இவருக்கு குழந்தைகள் இல்லை. தற்போது வயதாகிவிட்டதால் பணகுடி பகுதியில் யாசகம் எடுத்து வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். துப்பு துலக்குவதற்காக நெல்லையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இரவில் மதுகுடித்தவர்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.