சென்னையில் பரபரப்பு.. போலீஸ் நிலையத்தில் வைத்து சப் இன்ஸ்பெக்டருக்கு கத்திக் குத்து
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டருக்கு கத்திகுத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சையத் முன்னாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சையத் முன்னா மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனை குத்த முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அவரை தடுத்தார்.
இதனால் கோபமடைந்த சையத் முன்னா கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியை வெட்டினார். இதில் அவரது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் சையத் முன்னாவை மடக்கி பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு கைகளில் தையல் போடப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டரை தாக்கய சையத்முன்னாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.