அதிசய' கணேசனாக மாறிய 'அசட்டு' கணேசன்- ஒய்ஜி மகேந்திரனின் புதிய நாடகம்!
சென்னை: ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடித்துள்ள புதிய நாடகம் ‘சொப்பன வாழ்வில்'.
நாடகத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள யுஏஏ என்கிற யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழு, கடந்த 63 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நாடகங்களை நடத்தி வருகிறது.
யுஏஏவின் 65வது நாடகம் தான் இந்த சொப்பன வாழ்வில்.
ஒய்.ஜி.மகேந்திரன்...
திரைப்பட நடிகரும், மேடை நாடக நடிகருமான ஒய்ஜிமகேந்திரனின் இயக்கத்திலும், நாடக வடிவாக்கத்திலும் இந்த நாடகம் உருவாகியுள்ளது. இதில் நாயகனாக ஒய்.ஜி.மகேந்திரனும், நாயகியாக திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையுமான யுவஸ்ரீ நடித்துள்ளனர்.
சினிமா இசையமைப்பாளர்...
இந்த நாடகத்தின் கதையை கோபு - பாபு எழுதியிருக்கிறார். முதன்முறையாக, இந்த நாடகத்திற்கான முகப்பு இசையை பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
மனநலம் குன்றியவர்...
அப்பாவியான மனநலம் குன்றிய மனிதனைப் பற்றியது இந்தக் கதை. மனநலம் பாதிக்கப் பட்ட அந்த மனிதரை சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பது தான் கதைக்களம்.
அற்புத சக்தி...
இதில் மனநலம் குன்றியவராக ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மனைவியாக யுவஸ்ரீயும் நடித்துள்ளனர். கதைப்படி, குளியலறையில் வழுக்கி விழும் ஒய்.ஜி.க்கு அற்புத சக்தி ஒன்று கிடைக்கிறது.
பழிக்குப் பழி...
நடக்கப் போவதை முன்கூட்டியே கூறும் அந்த சக்தி மூலம் தன்னை உதாசீனப் படுத்தியவர்களை ஒய்.ஜி.எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் இந்த நாடகத்தின் கதை.
அசட்டு கணேசன்...
நாடகத்தில் 'அசட்டு' கணேசன், 'அதிசய' கணேசன் ஆகிவிட, வீட்டார் சந்தோஷப்பட, ஊடகங்களில் கணேசன் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. கணவர் பரபரப்பான ஆளாக மாறிவிட்டாலும், 'அசட்டு' கணேசனை தான், மனைவி விரும்புகிறார்.
நாடகத்தின் கதைக்களம்...
இந்த நாடகம் தொடர்பாக ஒய்.ஜி. கூறுகையில், ‘ஒரு அப்பாவியான கொஞ்சம் மனநலம் குன்றிய மனிதனை இந்த சமுதாயம் எப்படிப் பார்க்கிறது, அவன் இந்த சமுதாயத்தை எப்படிப் பார்க்கிறான் என்பதை மையமாகக் கொண்டு இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.
கேலி... கிண்டல்...
நடிகர் தேங்காய் சீனிவாசனிடம் வத்சல் என்ற உதவியாளர் இருந்தார். அவர் சற்று மனநலம் குன்றியவர்போல் இருப்பார். அவரை நான், கமல்ஹாசன் உட்பட பலரும் கேலி செய்திருக்கிறோம்.
பிராயச்சித்தம்...
அந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு இன்றும் இருக்கிறது. அதற்கு பிராயச்சித்தமாக இந்தக்கதையை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்லலாம்' எனத் தெரிவித்துள்ளார்.