சென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழிசை, மத்திய அமைச்சர் விகே. சிங் பங்கேற்பு
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று யோகா செய்தனர். மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்தியமைச்சர் வி.கே.சிங், பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 1லட்சத்துக்கும் அதிகமான யோகா நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலும் இன்று யோகா தின கொண்டாட்டங்கள் களை கட்டின. கல்லூரிகள், பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவர்கள் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் இதில் பங்கேற்று யோகா செய்தனர். மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, ஆசிரியர்களும் பெற்றோர்களும், குழந்தைகளுடன் இணைந்து யோகா பயிற்சியை யோகா செய்தனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் யோகா கொண்டாட்டங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டன.

மத்திய அமைச்சர் வி.கே.சிங்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பள்ளி, மாணவர்களும் திரளான அளவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், யோகாவின் சிறப்பம்சங்கள் மற்றும் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பிரம்மாண்ட யோகா பயிற்சி
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 5 ஆயிரம் பேர் திரண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்துணர்ச்சியுடன் வந்திருந்தனர்.

கடற்கரையில் யோகா
மெரினா பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைகளிலும் திறந்த வெளியில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மெரினா கடற்கரையில் 100 பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல காந்திசிலை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் அருகிலும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

20000 பேர் பங்கேற்பு
ஈஷா யோகா மையம் சார்பில், சென்னை எத்திராஜ் கல்லூரி, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மையங்களில் 264 யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன இதில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

சாய்ராம் பொறியியல் கல்லூரி
சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 3000 பேர் பங்கேற்றனர். இதில் மத்திய இணை அமைச்சர் விகே. சிங், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆகியோர் யோகாவின் சிறப்பு குறித்து வலியுறுத்தி பேசினர்.

புத்துணர்ச்சி
இன்று நடந்த யோகா பயிற்சியில் சிறுவர், சிறுமிகள் பலரும் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை எளிதாக செய்தனர்.
வயது வித்தியாசமின்றி யோகா வகுப்புகளில் கலந்து கொண்ட அனைவருமே, யோகா பயிற்சிக்கு பின்னர் தங்களது மனதும், உடலும் இதமாகி ஒருவித புத்துணர்ச்சி கிடைத்திருப்பதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications