100 ரூபாயில் மொத்த ஊட்டியையும் சுற்றி பார்க்கலாம்.. அரசு செய்த சூப்பர் விஷயம்
ஊட்டி: வெறும் 100 ரூபாய் இருந்தால் மொத்த ஊட்டியையும் சுற்றி பார்க்கலாம்.. இதற்காக அரசு 'சர்க்கியூட் பஸ்' எனப்படும் சுற்றுலாப் பேருந்து சேவையை தொடங்கி உள்ளது. இந்த பேருந்து சேவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் வாங்கும் சுற்றுலா பயணிகள், எந்த ஓர் சுற்றுலா தலத்திலும் ஏறலாம், இறங்கலாம்.
கோடை விடுமுறையை ஒட்டி பலரும் இப்போது ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் தளங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கோடைக்காலம் என்பதால் சமவெளிப்பகுதியில் வெயில் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் மலைப்பகுதியில் வெயில் குறைவாகவும், ரம்மியமான சிதோஷண நிலையும் காணப்படும். மேலும் இயற்கை காட்சிகளை ரசிக்கவும், விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழவும் முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை அதிகப்படியான மக்கள் மலைகளின் அரசியான நீலகிரிக்கே செல்கிறார்கள். குறிப்பாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகமாக உள்ளது. கோடை விடுமுறை மற்றும் இன்று மே 1 நேற்று சனி, ஞாயிறு என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, சிறுவர்பூங்கா, தொட்டபெட்டா, முதுமலை சரணாலயம், படகு இல்லம் ஆகியபகுதிகளுக்கு அதிகமாக செல்வார்கள். இதனால் அந்த பகுதிகள் எல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகிறது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளால் திணறிப்போய் காணப்படுகிறது. நகர் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் மூலமாக 'சர்க்கியூட் பஸ்' எனப்படும் சுற்றுப் பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவை சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பேருந்து உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம்,தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா (நுழைவு வாயில்), சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும்.
அரை மணி நேரத்துக்கு ஒரு முறை என 20 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகள், ஃபிங்கர்போஸ்ட், ஆவின் நிறுவனம், மத்தியபேருந்து நிலையம், காந்தல் பகுதிகளை மையமாக கொண்டு இயங்குகிறது. பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, குறிப்பிட்ட சுற்றுலா தலத்தை பார்க்க செல்பவர்களுக்கு ரூ.20 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

ஏழை மக்கள் பலரால், கார், வேன்களில் அதிக கட்டணம்கொடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. இவர்களுக்காகவே இந்த சர்க்கியூட் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சர்க்யூட் பஸ்களும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. அதேநேரம் மக்கள் கால் டாக்ஸிக்கு பதில் பேருந்துகளில் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறைய காரணமாக உள்ளது.
உதகை போக்குவரத்துக்கழக பொது மேலாளர் நடராஜன் இந்த பேருந்துகள் இயக்கம் குறித்து கூறும் போது, "கோடை சீசனையொட்டி முதற்கட்டமாக 20 சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் வாங்கும் சுற்றுலா பயணிகள், எந்த ஓர் சுற்றுலா தலத்திலும் ஏறலாம், இறங்கலாம். அதே டிக்கெட்டுடன் ஒரு நாளில் எந்த சுற்றுப்பேருந்திலும் பயணிக்கலாம். வரும் நாட்களில்சுற்றுலா பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கநடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications