எஸ்.எம்.எஸ் அனுப்புவோர் வழி... தனி வழி… சென்னை மாநகராட்சியின் புதிய பாதை
சென்னை: ‘வாக் அன்டு டாக் வாட் அன் ஐடியா! என அபிஷேக்பச்சன் சொன்னாலும் சொன்னார்... காதில் செல்போனை வைத்துக்கொண்டேதான் இப்போது தெருவில் நடக்கிறார்கள். இப்படி பேசிக்கொண்டோ, எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டோ நடந்து செல்லும் பலரும் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. பெரும்பாலும் ரயில்பாதையை கடப்பவர்களும், சாலையை கடப்பவர்களும்தான் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு தனிதனி சாலைகள் அமைக்கப்படுவதைப் போல, செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டே நடப்பவர்களுக்கு சென்னையில் தனி பாதை அமைக்க மாநகராட்சிக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டே சாலையில் நடந்து செல்பவர்களுக்கு பெல்ஜியத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இதே போன்று வசதி ஏற்படுத்தி தரலாம் என்று மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
செல்போன்கள் ஸ்மார்ட்போன்களாக உருமாற்றம் பெற்ற பின்னர் வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிரப்படுவது அதிகரித்து வருவது. இன்றைக்கு வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங் செய்து கொண்டே சாலையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சாட்டிங் பிரியர்கள்
ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்த பின்னர், சாலையில் செல்லும்போதும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டோ அல்லது வாட்ஸ் ஆப்-ல் சாட் செய்து கொண்டோ செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

பெல்ஜியத்தில் தனி பாதை
இதுபோன்று சாட்டிங் நடைவாசிகளுக்காகவே பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வர்ப் என்ற நகரில் ‘டெக்ஸ்ட் வாக்கிங் லேன்' என்ற பெயரில் சாலையில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருக்கே
இதே போன்ற வசதிகள் சீனாவில் உள்ள சாங்கிங் நகரம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ளது. எனவே டெக்ஸ்ட் வாக்கிங் லேனை சென்னையில் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சகோதரி நகரம்
சீனாவில் சாங்கிங் நகரத்துடன் சென்னை மாநகராட்சி சமீபத்தில் சகோதரி நகரங்கள் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நகரங்களுக்கும் இடையே தொழில்நுட்ப, கலாச்சார பரிமாற்றம் ஏற்படும்.

சென்னையில் தனி பாதை
புதிதாக போடப்படும் சாலைகளில், அகலமான ஒரு சில சாலைகளில் மட்டும் டெக்ஸ்ட் வாக்கிங் லேன் அமைக்க முயற்சி செய்யலாமா என்று யோசித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு பெரிதாக செலவாகாது. ஆணையரிடம் இதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதெல்லாம் சரிதான்... எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்கள் அதில்தான் நடந்து செல்வார்கள் என்பது எப்படி நிச்சயம்?












Click it and Unblock the Notifications