கோவையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி தற்கொலை
கோவை: கோவையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கதால் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் யோகராஜ்(20). அவர் பினுமோள்(19) என்பவரை காதலித்தார். அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அதே ஊரில் வசிக்க அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் 3 மாதங்களுக்கு முன்பு கோவை பீளமேடு பகுதியில் உள்ள வெற்றிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.
யோகராஜ் கோவையில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் யோகராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து அதிர்ந்தனர். காரணம் யோகராஜும், பினுமோளும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் வீட்டில் சோதனை நடத்தியபோது இளம் ஜோடி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு எங்கள் இருவரையும் மன்னித்து விடுங்கள். உங்கள் எதிர்ப்பையும் மீறி நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். உங்களை நாங்கள் மிகவும் சங்கடப்படுத்திவிட்டோம். எங்கள் உடலை சொந்த ஊரில் புதைத்து விடுங்கள் என்று அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து யோகராஜ் மற்றும் பினுமோளின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications