கரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
கரூர்: கரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகிலுள்ள சிந்தலவாடியைச் சேர்ந்தவர் அருண் குமார் (25) எம்.காம்., பட்டதாரியான இவர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். ஞாயிறு இரவு, அங்குள்ள மாரியம்மன் கோவில் பூச்சொரித்தல் விழா நடந்துள்ளது. இதை பார்க்க சிறுமியின் வீட்டில் இருந்த எலோரும் கோவிலுக்கு போய்விட்டனர்.
இந்த நேரத்தில், அந்த சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்த அருண்குமார், சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் சாக்லேட் கொடுத்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய தன் பெற்றோர்களிடம் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் படி, குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.