தஞ்சாவூர் தகராறு.. சினிமாபோல் பேருந்துகளை மோதி சண்டை! இரண்டையும் பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர்: தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே நேர பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் பின்னால் பேருந்தை இயக்கி மற்றொரு பேருந்தின் மீது மோதிய நிலையில் 2 பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் தஞ்சை மாநகர பேருந்துகள், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஓட்டுநர்கள் தகராறு
இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு பேருந்துகள் புறப்படும் நேரத்தில் 2 தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பி.எல்.ஏ. மற்றும் விபிஆர் பேருந்துகளில் எதை முதலில் இயக்குவது என்று மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

மோதிய பேருந்து
ஆத்திரமடைந்த விபிஆர் பேருந்தின் ஓட்டுநர், அதில் ஏறி ரிவர்ஸ் சென்று பின்னால் இருந்த பிஎல்ஏ தனியார் பேருந்து மீது வேகமாக மோதினார். இதனால் மோதப்பட்ட பேருந்து சில அடிகள் பின்னால் நகர்ந்து சென்றது. இதனால் அந்த பேருந்தின் முன்பகுதி சிறுதி சேதமடைந்தது. அதே நேரம் ரிவர்ஸ் சென்று மோதிய பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது.

பேருந்துகள் பறிமுதல்
சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்த இந்த வீடியோவை பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக தஞ்சை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் 2 பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தனியார் பேருந்துகள்
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தை பொருத்தவரை அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும் பல விதிகளை மீறுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அதிக வேகம்
அதிலும் பட்டுக்கோட்டை, கும்பகோணம் மார்க்கமாக தஞ்சையில் இருந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாகவும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் விபத்துக்களும் ஆங்காங்கே ஏற்பட்டு இருக்கின்றன.

போட்டா போட்டி
தஞ்சையில் இருந்து இந்த வழித்தடங்களில் செல்லும் தனியார் பேருந்துகள் ஒருவரை ஒருவர் போட்டிப்போட்டுக் கொண்டு சென்று வருகின்றன. இதனால் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே மோதல் சம்பவங்களும் தொடர்கதையாக இருப்பதாகவும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றன.












Click it and Unblock the Notifications