தஞ்சாவூர் பள்ளிவாசலில் காலணியுடன் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர்! கடும் நடவடிக்கை கோரும் எஸ்.டி.பி.ஐ!
தஞ்சை: தஞ்சாவூரில் பள்ளிவாசலுக்குள் காலணியுடன் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரரை ராணுவ பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
காலணியுடன் சென்று பள்ளிவாசலின் புனிதத்தைக் கலங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல்-அன்சர் பள்ளிவாசலில், நேற்று முன்தினம் அதிகாலை வேளையில், தொழுகைக்கான பாங்கு அழைப்பு விடுத்தபோது, பள்ளிவாசலுக்குள் காலனியுடன் அத்துமீறி தேசிங்கு ராஜா என்பவர் நுழைந்திருக்கிறார்.''
''பள்ளிவாசல் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதோடு, பள்ளிவாசலின் புனிதத்தைக் கலங்கப்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார். இராணுவத்தில் பணிபுரிவதாக கூறப்படும் தேசிங்கு ராஜா, ஜமாத்தார்கள் மற்றும் அமைப்புகளின் புகாருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்''.
''இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இராணுவ பணியிலிருந்தும் நிரந்ததமாக நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications