தஞ்சை அருகே பட்டியலினத்தவர்கள் மீது சாதிய ஒடுக்கு முறை! எஸ்.டி.பி.ஐ. பரபரப்பு குற்றச்சாட்டு!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பட்டியலின சமூகத்தினர் மீது சாதிய ஒடுக்குமுறை நிகழ்வதாக எஸ்.டி.பி.ஐ.கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ஊர் விலக்கல் என்கிற பெயரில் ஆதிக்க உணர்வோடு சாதிய வன்மத்தினை தொடர்வதும், தூண்டுவதுமாக இருக்கும் நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கிளாமங்கலம் தெற்கு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள கிளாமங்கலம் தெற்கு எனும் கிராமத்தில் நடைபெற்றுவரும் பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான தீண்டாமை நடவடிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றது. அந்த கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுவது, முடிவெட்ட அனுமதி மறுப்பது, பொதுப்பாதை பயன்பாட்டை மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.

பொருட்கள் தர மறுப்பு
இதுதொடர்பாக மே17 உள்ளிட்ட சமூக இயக்கங்கள் மூலம் அதிகாரிகளிடத்தில் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்ததால், மேற்படி கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூக மக்களை ஊரைவிட்டு விலக்கி வைத்து அவர்களுக்கு கடைகளில் பொருட்கள் தர மறுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக வெளியான காணொளி அதிர்ச்சி அளிக்கின்றது. இத்தகைய ஆதிக்க மனப்பான்மை தீண்டாமை நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.

தீண்டாமை நடவடிக்கைகள்
சமீபத்தில் தான் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் இதுபோன்ற நிகழ்வு அரங்கேறியது. அதுதொடர்பாக கடைக்காரர், ஊர் நாட்டாண்மை உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். எனினும் அரசின் எந்த சட்ட நடவடிக்கையும் எங்களை எதுவும் செய்யாது என்கிற ஆணவப் போக்கில், தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் தீண்டாமை நடவடிக்கைகள் அரங்கேறி இருப்பதை உணர்த்துகிறது.

தோல்வியை தழுவுகிறது
கிளாமங்கலம் தெற்கு கிராமத்தில் நிலவிவரும் தீண்டாமை நடவடிக்கைகள் மீது அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், அங்கு பட்டியலினத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தடுத்திருக்க முடியும்.
சாதிய ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு மேற்கொள்ளும் அலட்சியமான நடவடிக்கைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தீண்டாமை ஒழிப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு இருந்தாலும், அரசுக்கு அதில் தனி கவனம் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமங்களில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.

நவீன காலத்திலும் தீண்டாமை
ஆகவே, நவீன காலத்திலும் தீண்டாமையை மேற்கொண்டும், ஊர் விலக்கல் என்கிற பெயரில் ஆதிக்க உணர்வோடு சாதிய வன்மத்தினை தொடர்வதும், தூண்டுவதுமாக இருக்கும் நபர்கள் மீது உடனடியாக சட்டரீதியாக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்படும் மக்களுக்கும், தீண்டாமை நடவடிக்கைகளை வெளிக்கொணரும் நபர்களுக்கும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications