தமிழகத்தில் கொடூரம்.. இளைஞரை நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்குதல்.. 15 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திருமணத்துக்காக சொந்த ஊர் வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே உள்ளது தொன்றாம் பட்டு கிராமம்.
பெரும் சோகம்.. கோவை அருகே ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழப்பு.. இதற்கு ஒரு முடிவே கிடையாதா?
சதீசும், அவரது சகோதரரும் தொன்றாம் பட்டு பகுதிக்கு ஏஜெண்டு ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர் சதீஷ் காரில் சென்றுள்ளார். அவரது சகோதரர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். தொன்றாம் பட்டு கிராமத்தில் வைத்து சதீஷ் தனது காரை ரிவர்ஸ் எடுத்தபோது அவரது சகோதரரின் மோட்டார் சைக்கிளில் இடித்துள்ளது.
மதுபோதையில் இருந்தவர்கள்
அப்போது அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த சிலர் உடனடியாக வந்து யார் நீ? உனக்கு எந்த ஊர்? ஏன் பைக்கை இடித்தாய்? என்று தகராறு செய்துள்ளனர். அப்போது சதீஷ் ''இது எனது அண்ணனின் மோட்டார்சைக்கிள்தான்'' என்று கூறியுள்ளார். ஆனாலும் மதுபோதையில் இருந்தவர்கள் இதனை காதில் ஏற்றிக்கொள்ளாமல் சதீஷை தேவையில்லாமல் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
நிர்வாணமாக தாக்கியுள்ளனர்
அவரது சாதி குறித்தும் கிண்டலாக குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தொடந்து சதீசை அடித்துள்ளனர். ஏன் என்னை அடிக்கிறீர்கள்? என்று சதீஷ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் சதீஷின் பேண்ட், சட்டையை கிழித்து அவரை நிர்வாணமாக தாக்கியதாக கூறப்படுகிறது. சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் சதீஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கண்டுகொள்ளாத போலீஸ்
இது பற்றி தகவல் அறிந்து சதீஷின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு வந்தபோது அவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து உறவினர்கள் அந்த கும்பலிடம் இருந்து மயங்கிய நிலையில் இருந்த சதீஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக சதீஷின் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
யூ-டியூப் சேனல்
மேலும், அந்த பகுதியில் இருக்கும் கட்சியை சேர்ந்த சிலர் மருத்துவமனைக்கு சென்று போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி சதீஷிடம் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. தன்னை தாக்கியவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்பதே சதீஷின் கோரிக்கையாக உள்ளது. இந்த கொடூர செயல் குறித்து u3brutus என்ற யூ-டியூப் சேனல்தான் முதன்முதலில் செய்தி வெளியிட்டது. அந்த சேனல் மூலம்தான் இந்த கொடூர சம்பவம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.