"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி
தஞ்சாவூர்: "எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால் நான் கொண்டுவந்த திட்டங்கள் என்றும் நிலைத்து நிற்கும்" என தஞ்சையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். என்னை பொறுத்தவரை தலை சிறந்த தமிழ்நாட்டை , தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க என் இறுதி மூச்சு வரை நான் ஓய்வு இல்லாமல் உழைப்பேன்... இன்னும் சொல்கிறேன்.. என் சக்தியை மீறி உழைக்க தயாராக இருக்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் பிரச்சாரம் செய்த போது பேசுகையில், திமுக ஆட்சியில் மட்டும் கொரோனா வந்திருந்தால் முதல்வர் முக ஸ்டாலின் காணாமல் போயிருப்பார், அந்த கொரோனாவிலேயே போயிருப்பார் என்று கூறியிருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் இன்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல... அது திமுகவின் வாக்கு களஞ்சியம் என்று கன்பார்ம் ஆகிவிட்டது.. டெல்லியின் காலடியில் தமிழ்நாட்டை அடகு வைப்பது எடப்பாடி பழனிசாமியின் விருப்பம்.. தமிழ்நாட்டின் மாநில உரிமை, சுயமரியாதையை டெல்லிக்கு தர விரும்பிகிறார்.. ஆனால் இதற்கு தடையாக இருப்பது இந்த ஸ்டாலின்.. அதனால் எடப்பாடி பழனிசாமி கொஞ்ச நாட்களாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்..
ஸ்டாலின் போய் சேரணும் என்கிறார்.. தன் ஆழ் மனது விருப்பங்களை, வக்கிரங்களை பழனிசாமி இப்போது அடிக்கடி பேச ஆரம்பித்துவிட்டார். மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர்.. மதிப்பிற்குரிய பழனிசாமி அவர்களே.. பிறக்கும் எல்லாருமே ஒரு நாள் இறக்கத்தான் போகிறார்கள்.. மரணம் என்பது ஏதோ ஒரு நாள் எல்லாருக்கும் வரத்தான் போகிறது.. இது ஸ்டாலினுக்கும் வரலாம்.. ஆனால் இந்த ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள்.. திட்டங்களால் வாழ்வு பெற்றவர்கள்.. நிச்சயம் என்னை நினைவில் வைத்துக் கொள்வார்கள்.. அந்த திட்டங்கள் வாழும்.. அதனை யாரும் அழிக்க முடியாது..
பழனிசாமி விருப்படி நான் மண்ணுக்கு போகலாம்.. ஆனால் நான் கொண்டுவந்த திட்டங்கள் என்றும் நிலைத்து நிற்கும்.. என்னை பொறுத்தவரை தலை சிறந்த தமிழ்நாட்டை , தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க என் இறுதி மூச்சு வரை நான் ஓய்வு இல்லாமல் உழைப்பேன்... இன்னும் சொல்கிறேன்.. என் சக்தியை மீறி உழைக்க தயாராக இருக்கிறேன்.. திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசுகளும், திமுகவும் இருக்கும் வரை பழனிசாமியின் எண்ணம் பலிக்கவே பலிக்காது.. தமிழ்நாட்டு மக்கள் பழனிசாமியின் ஆணவ பேச்சுக்கு முடிவு கட்ட அதற்கு உரிய நாள் தான் ஏப்ரல் 23.. " இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications