‛‛தஞ்சை பெரிய கோவில் போனால் கதை முடிந்தது’’.. அன்பில் மகேஷை எச்சரித்த கேஎன் நேரு! பறிபோகும் பதவி?
தஞ்சாவூர்: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தஞ்சை பெரியக்கோவிலை நோக்கி கைகாட்டிய அமைச்சர் கேஎன் நேரு, ‛‛உள்ளே சென்றால் கதை முடிந்திடும்'' எனக்கூறுவதும், திமுக எம்எல்ஏ சந்திரசேகரன், ‛‛எவ்வளவோ சிரமப்பட்டு கோவிலுக்கு கூப்பிட்டார்கள். நான் போகவே இல்லையே'' எனக்கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அன்பில் மகேஷிடம் அமைச்சர் கேஎன் நேரு அப்படி கூறியது ஏன்? தஞ்சை பெரியக்கோவிலால் எம்ஜிஆர், கருணாநிதி, ஆ ராசா, கருணாநிதி உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டது எப்படி? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் பழங்கால கட்டடக்கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூரில் உள்ள பெரியக்கோவில் உள்ளதுத. பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படும் இந்த பெரியக்கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். சிவ பக்தரான இவரது ஆட்சிக்காலத்தில் ஏராளமான சிவாலயங்கள் கட்டப்பட்டது.

இதில் இன்றும் தமிழகர்களின் கட்டடக்கலைக்கு கம்பீரமாக உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் பெரியக்கோவில் இருக்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை பண்பாட்டு சின்னங்களின் இந்த கோவில் இடம்பிடித்துள்ளது. தற்போதைய நவீன கட்டடக்கலை நிபுணர்களே பார்த்து அதிசயத்து வரும் கோவிலாக தஞ்சை பெரியக்கோவில் தமிழகத்தின் அதிசயமாக தான் உள்ளது.
இந்நிலையில் தான் தஞ்சை பெரியக்கோவில் பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு கூறிய ஒரு கருத்து தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது நேற்று தஞ்சை பெரியகோவில் அருகே ரூ.7 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சிவங்கை பூங்காவை அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ சந்திரசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன்பிறகு பூங்கா வளாகத்தில் அவர்கள் அனைவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அமைச்சர் கேஎன் நேரு தஞ்சை பெரிய கோவிலை காட்டி, ‛‛உள்ளே போனால் கதை முடிந்தது'' என்று அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறினார். அதனை கேட்ட அன்பில் மகேஷ் சிரித்தபடி நடந்து சென்றார். இந்த சமயத்தில் அருகே நடந்து சென்ற திமுக எம்எல்ஏ சந்திரசேகரன், ‛‛எவ்வளவோ சிரமப்பட்டு கோவிலுக்கு கூப்பிட்டார்கள். நான் போகவே இல்லையே. பத்திரிகையில் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லி கிளம்பிவிட்டேன்'' என சிரித்தபடி கூறினார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மேலும் தஞ்சை பெரிய கோவிலை காட்டி உள்ளே போனால் கதை முடிந்தது என்று அமைச்சர் அன்பில் மகேஷிடம், அமைச்சர் கேஎன் நேரு கூறியதன் பின்னணியில் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. அதாவது தஞ்சை பெரியக்கோவிலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ராசி இருப்பது இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது கோவிலுக்குள் செல்லும் அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை இழப்பார்கள் அல்லது மரணத்தை தழுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இதற்கு உதாரணமாக சில விஷயங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு வைபவத்திற்கு வரும்போது அப்போதைய தமிழக முதல்வராக எம்ஜிஆர் கோவிலில் மயக்கமடைந்தார். அதன்பிறகு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அதன்பிறகு கருணாநிதியும் தஞ்சை பெரிய கோவிலின், 1,000வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். இவர்கள் தவிர இன்னும் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் கோவிலுக்குள் போனால் ஒன்று பதவி பறிபோகும் இல்லாவிட்டால் உயிர் போகும் என்ற சென்டிமென்ட்டை உடைப்பதாக கூறி கோவிலுக்கு சென்ற திமுக எம்பி ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணி, பழனிமாணிக்கம் உள்ளிட்டவர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிபோனது. ஆ ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் 2ஜி வழக்கில் டெல்லி திகார் சிறை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மனதில் வைத்து தான் அன்பில் மகேஷிடம், அமைச்சர் கேஎன் நேரு தஞ்சை பெரியக்கோவிலை காட்டி ‛உள்ளே சென்றால் கதை முடிந்தது' என தெரிவித்ததும், திமுக எம்எல்ஏ சந்திரசேகரன் பிடிவாதமாக கோவிலுக்குள் செல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications