“மோடி சிறந்தவர்.. அவர் காலத்தில் நாட்டுக்கே பெருமை!” - முஸ்லிம் லீக் காதர் முகைதீன் திடீர் புகழ்ச்சி
தஞ்சாவூர்: மோடி ஆட்சியிலேயே இந்தியாவுக்கு பெருமை கிடைத்து உள்ளது என்றும், மோடியை சிறந்தவர் என்று கூறுவதில் தானும் உடன்படுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஏஆர்கே ஹோட்டலில் மாவட்ட தலைவர் சுல்தான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஜமால் முகமது இப்ராகிம், கல்வி பணி மாநிலச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் லீகின் 75வது ஆண்டு விழா
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைகிதீன் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளோம்.

2 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடு
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சியாக தொடர்கிறது. மு.க.ஸ்டாலின் தனக்கு உறுதுணையாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி உள்ளார்.

2 ஆண்டுகளில் அமைச்சர் பதவி
முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-வது முறையாக முதலமைச்சரான பிறகு தனது மகன் மு.க.ஸ்டாலினை அமைச்சராக்கினார். ஆனால், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளிலேயே தனது மகன் உதயநிதி ஸ்டாலினை பொறுப்புமிக்க அமைச்சராகி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஓர் இளைஞர். நல்ல சிந்தனை உடையவர். அனைவரிடமும் நெருக்கமாக பழகக் கூடியவர்.

ஜி 20 மாநாடு
தமிழக அரசியலில் நல்ல எதிர்காலத்திற்கு தொடக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது. ஜி -20 மாநாடுக்கு இந்தியா தலைமை ஏற்கிறது என்பது இந்தியாவுக்கு தனி பெருமை ஆகும். இதன்மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறோம். இந்த மாநாடு மூலம் இந்தியாவுக்கு பேரும் புகழும் கிடைக்கும்.

ஒற்றுமையாக வேண்டும்
2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் உள்ள சமூக நீதியை ஏற்றுக்கொண்ட கட்சிகள், மதவாதத்தை புறம் தள்ளுகின்ற கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். சீன நாட்டின் பிரச்சினையில் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்பியதை பார்க்கும்போது, வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வாய்ப்புள்ளது. அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது.

மோடி சிறந்தவர்
நம் இந்திய நாட்டின் பிரதமர் சிறந்த தலைவராகத்தான் இருக்க முடியும். அனைவரும் விரும்பிதான் மோடியை பிரதமர் ஆக்கியுள்ளோம். அவரது கொள்கையில் சில மாறுபாடுகள் இருக்கும். அதனை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவது இயற்கை தான். ஜி-20 மாநாட்டில் மோடியை முன்னிலைப்படுத்தியே தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை, மோடியின் காலத்தில்தான் வந்தது. பிரதமர் மோடியை நாட்டு மக்கள் சிறந்தவர் என்று கூறுவதற்கு நான் உடன்படத்தான் செய்கிறேன்.

மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை
வரும் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் நடைபெறும் மாநாட்டின்போது முடிவெடுப்போம். இதேபோல் பாஜக மற்றும் அதனுடன் சார்ந்த கட்சியுடன் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவதற்கு நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வரும் தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்புகள் இல்லை." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications