ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் போன கூறல் கத்தாழை மீன்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்! அப்படி என்ன ஸ்பெஷல்?
தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 25 கிலோ எடை கொண்ட கூறல் கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் போனது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ளது அதிராம்பட்டினம் நகராட்சி. இங்கு மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு தினசரி ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடி விற்பனை செய்து வருகிறார்கள்.

மேலும் இங்கிருந்து மீன்களை ஏராளமான வியாபாரிகள் வாங்கி ஏலத்திற்கு விடுவது வழக்கம். இந்த பரபரப்பான ஏலத்தை பார்க்கவே இங்கு மக்கள் அதிகம் பேர் கூடுவர்.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் பகுதி கரையூர் தெரிவை சேர்ந்த மீனவர் ரவி என்பவர் வலையில் அரிய வகை மீனான கூறல் கத்தாழை மீன் சிக்கியது. இந்த மீன் ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த மீனின் எடை 25 கிலோ எடை உள்ளது.
இந்த மீனில் மருத்துவக் குணங்கள் உள்ளன. இது ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தது. இந்த வகை ஆண் மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். பெண் மீன்களுக்கு சிறிய அளவிலான நெட்டி இருக்குமாம்.
இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும். மேலும் இந்த நெட்டி, ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒரு வகை வேதிப்பொருட்களை கொண்டது. அது ஒயின், ஜெல்லி மிட்டாய், மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மீனவர்கள் இதை சேமித்து தங்கத்தை போல் கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என சொல்லப்படுகிறது.
ஒரு மீனில் குறைந்தபட்சம் 100 கிராம் வரை நெட்டி கிடைக்கும் என மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வகை மீன்கள் ஆழ்கடலில் 4 அல்லது 6 நாட்கள் தங்கி மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தால் மட்டுமே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்த மீன்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மீன் கிடைத்தாலே மீனவர்களுக்கு ஜாக்பாட் கிடைத்தது போல்தான் இருக்கும்.
ஆழ்கடலில் ஆபத்தான நிலையில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு இதுபோன்று என்றாவது ஒரு முறை லாபம் கிடைத்தால் அது நல்ல விஷயம்தானே!












Click it and Unblock the Notifications