ஆயுத பூஜை வந்தால் போதும்.. கும்பகோணம் மேயர் சரவணனை கையில பிடிக்க முடியாது! ஆட்டோ ஸ்டாண்டில் ஆஜர்!
தஞ்சை: ஆயுத பூஜை வந்துவிட்டால் போதும், தனது அனைத்து அரசியல் பணிகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கும்பகோணம் பெரியகடை வீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆண்டுதோறும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் மேயர் சரவணன்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கும்பகோணத்தில் சாதாரண வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு மேயர் பதவியை வழங்கிய கட்சி காங்கிரஸ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரியகடை வீதி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தவர் சரவணன். காங்கிரஸ் கட்சியில் உள்ள இவர், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனிடையே திமுக கூட்டணியில் கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அங்கு யார் மேயராக வரக்கூடும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
யாரும் எதிர்பாராத வகையில் சாதாரண ஆட்டோ ஓட்டுநரான சரவணனை மேயர் வேட்பாளராக அறிவித்தார் கே.எஸ்.அழகிரி. இதையடுத்து கும்பகோணம் மேயராக பதவியேற்றுக் கொண்ட சரவணன், இன்னுமே தனத ஆட்டோ ஓட்டுநர் தொழிலை மறக்கவில்லை. காலணி தொடங்கி ஆடை வரை மேயராவதற்கு முன்பு எப்படி எளிமையாக இருந்தாரோ அதே எளிமையை தான் இன்னுமே பின்பற்றி வருகிறார் சரவணன்.
கும்பகோணம் மாநகராட்சி மேயர் என்ற பந்தா எதுவுமின்றி ஆயுதபூஜையான நேற்று தனது ஆட்டோவை தாமே கழுவி சுத்தம் செய்து பெரிய கடைவீதி ஆட்டோ ஸ்டாண்டிற்கு ஓட்டிச் சென்றார் சரவணன். பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப பழசை மறக்காமல் தனது ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்களுடன் பூஜை போட்டதுடன், ஆட்டோவில் கடைவீதியை ஒரு ரவுண்டும் அடித்தார்.
அரசியல் பணிகள், மாநகராட்சி நிர்வாகப் பணிகள் என எல்லாவற்றையும் நேற்று ஒரு நாள் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஆயுதப்பூஜையை தனக்கான நாளாக நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன். இதனிடையே இவர் பெயருக்கு தான் மேயர் முடிவுகள் எல்லாமே திமுகவை சேர்ந்த துணை மேயர் எடுப்பது தான் என்ற பேச்சும் கும்பகோணத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications