காதலியைக் கொன்ற காதலன்.. பிள்ளை பாசத்தில் தவித்த தந்தை! காத்திருந்து காலையில் கருவறுத்த சம்பவம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காதல் தகராறில் பள்ளி ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் ஜாமீனில் வெளிவந்த காதலனை ஆசிரியையின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேலக்கழக்குடி, கொத்தட்டை, பிராந்தை கிராமத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகள் காவியா (26), ஆலங்குடி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
காவியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26) என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அஜித்குமார் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், காவியாவின் பெற்றோர் அவருக்கு உறவினரான அத்தை மகனுடன் திருமணம் பேச முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடத்தினர்.

ஆசிரியை கொலை
இந்த தகவலை அஜித்குமாரிடம் காவியா ஆரம்பத்தில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை வீடியோ கால் அழைப்பின் மூலம் அஜித்குமாரிடம் காவியா காட்டியதாக தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அஜித்குமார், கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி காலை காவியா வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்துள்ளார்.
காதலன் கொடூர முடிவு
அப்போது, "என்னை காதலித்துவிட்டு வேறு ஒருவருடன் எப்படி நிச்சயம் செய்யலாம்" என்று கூறி, அவர் வைத்திருந்த கத்தியால் காவியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
ஆசிரியையின் தந்தை
பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகளை இழந்த துயரத்தில் இருந்த காவியாவின் தந்தை மற்றும் குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை அஜித்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, காவியாவின் தந்தை உட்பட நான்கு பேர் அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
காதலனை கொன்ற தந்தை
அப்போது அவர்கள் அரிவாளால் அஜித்குமாரை சரமாரியாக வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்ததும் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அஜித்குமாரை வெட்டிக்கொன்ற காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் நால்வரும் நேரடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளனர்.
பழிக்குப்பழி கொலை
போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே சம்பவத்தில் முதலில் ஆசிரியை கொலை செய்யப்பட்டதும், பின்னர் அதற்கு பழிவாங்கும் விதமாக காதலன் கொலை செய்யப்பட்டதும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications