2 நாள் முன்பாக சபரிமலை.. இன்று மன்னார்குடி.. பொன்.ராதாகிருஷ்ணன் போகும் இடமெல்லாம் சிக்கல்
Recommended Video
தஞ்சாவூர்: மன்னார்குடி அருகே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. அதன் பாதிப்பு டெல்டா மாவட்டங்களில், மிக மோசமாக உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இப்படித்தான் மன்னார்குடி அருகே பல பகுதிகள் இன்னும் இருளில் மூழ்கியுள்ளன.
நெடுவாக்கோட்டை என்ற பகுதியில் இன்று மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாகனத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர்.
மன்னார்குடி 33வது வார்டு பகுதிக்கு மின்கம்பம் வரவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மின்கம்பத்தை உடனடியாக அனுப்பி வைக்க பரிந்துரை செய்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியதையடுத்து, அவரது கார் விடுவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, இருமுடி கட்டிச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, கேரள மாநில போலீஸ் அதிகாரிகள் நடத்திய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டு நாட்களில் இப்போது அவரது கார் மன்னார்குடி அருகே முற்றுகையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.