தமிழ்நாட்டில் தொடரும் ஷாக்.. குளிர்பான கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் நெளிந்த புழுக்கள்!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள இராசராசன் மணிமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் குளிர்பான கடை ஒன்றில் தண்ணீர் பாட்டிலில் புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூரில் உள்ள இராசராசன் மணிமண்டபம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் மக்கள் இங்கு அதிகமாக கூடுவது வழக்கமாகும். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

நெளிந்த புழுக்கள்
மணிமண்டபத்தில் ஒப்பந்த அடிப்படையில் குளிர்பான கடைகள் உள்பட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கலை என்பவர் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ஒரு குளிர்பான கடை ஒன்றில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் தண்ணீரில் புழுக்கள் நெளிவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ''காசு கொடுத்துதானே வாங்குகிறோம். ஏன் குடிநீர் இவ்வளவு மோசமாக இருக்கிறது. இதை குடித்து இருந்தால் என்னவாயிருக்கும்'' என்று கலை கடைக்காரரிடம் கேட்டுள்ளார்.

காலாவதியான பொருட்கள்
ஆனால் கடை உரிமையாளர் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. குழந்தைகள் அதிகளவில் வருவதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இங்குள்ள கடைகளில் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், கடையில் விற்கப்படும் குளிர்பானங்கள், உணவு பண்டங்கள் அதிக விலைக்கு விற்பதாகவும், மேலும் காலாவதியான பொருட்களை விற்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

சிறுமி சாவு
இதேபோல் மணிமண்டபத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், அங்கு குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பிரபல ஹோட்டலில் கெட்டு போன சிக்கனில் செய்த பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் பலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் கோரிக்கை
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். விசாரணையில் அது கெட்டுப்போன தரமற்ற குளிர்பானம் என்பது தெரியவந்தது. அந்த குளிர்பான ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் இதுபோல் காலாவதியான பொருட்கள் விற்பது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பாவி உயிர்களும் பறிபோகின்றன. எனவே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள கடைகள், ஹோட்டல்களில் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications