தஞ்சை: ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்தியதால் பரபரப்பு
ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை என விஷமிகள் சிலர் தொடர்ந்து விஷம செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த நபர் , கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி பிரச்சினையை தொடங்கி வைத்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்தனர். பெரியாரை அவமதிப்பு செய்தவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு தண்டித்தாலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே தான் இருக்கின்றன.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஆறடி உயரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் நள்ளிரவில் காவி துண்டு மற்றும் தலையில் தொப்பி அணிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இது குறித்து கல்லூரி மற்றும் அருகில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் மர்மநபர்கள் செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என இன்ஸ்பெக்டர் சுப்ரமணயன் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்திருப்பது திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.