'நன்றியும் நட்பும் மறவோம்'.. பார்த்ததும் அப்படியே உருகிப்போன சசிகலா.. தஞ்சையில் நெகிழ்ச்சி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நடராஜனின் குலசாமி கோயிலின் முன்பு இருந்த வாசகம்.. சசிகலாவிற்கு அப்படியே பொருந்தும் வகையில் இருந்துள்ளது. என்ன வாசகம் என்கிறீர்களா.. நட்பும் நன்றியும் மறவோம்.. இந்த வரி நிச்சயம் அவருக்கு பொருந்தும்.
சசிகலாவிற்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி. அவரது கணவர் மறைந்த நடராசனின் சொந்த ஊர் தஞ்சாவூர் அருகேயுள்ள விளார் கிராமம்.
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்ட சசிகலா, நீண்ட நாட்களாக சென்னை திநகரில் உள்ள வீட்டிலேயே இருந்தார் தற்போது முதல்முறையாக வெளிய வந்துள்ள சசிகலா, தஞ்சை அருகே விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலான வீரனார், மதுரை வீரன் கோயிலுக்கு சென்றார்.
சிறப்பு பூஜை
அங்கு நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் சிறப்பு பூஜைகளும் கோவிலில் நடந்தது. சசிகலா வருவதற்கு முன்னரே குழந்தைகளுக்கு மொட்டையடித்து இருந்தனர். வந்த பின்னரே காதுகுத்து வைபம் நடந்தது.
நன்றியும் நட்பும்
அந்த கோயிலில் சாமியின் பீடத்தில், முன்னோர்கள் நம் தெய்வம்; உறவுகள் ஒற்றுமை; நட்பும் நன்றியும் மறவோம், நீதியும் தருமமும் கடவுளே, வீரத்துடன் விவேகத்தைப் போற்றுவோம்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. நட்பும் நன்றியும் மறவோம் என்ற வாசகமும் அப்படியே சசிகலாவிற்கு பொருந்தும்.
உயிர்தோழி
நட்புக்காவும் நன்றிக்காவும் தன் உயிர்தோழியான ஜெயலலிதாவுடன் அவரது இறுதி காலம் வரை இருந்தார் சசிகலா. அத்துடன் சிறைக்கும் சென்றார். ஊழல் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டாலும், கடைசி வரை ஜெயலலிதாவை காத்தவர் அவர் தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். சசிகலா மட்டும் உடன் இல்லாமல் இருந்திருந்தால், ஜெயலலிதாவை என்றைக்கே அவரது எதிரிகள் வீழ்த்தி இருப்பார்கள் என்பது இன்றும் சொல்லப்படுகிறது.
காலமே விடை
சசிகலா ஏன் அரசியலில் இருந்து விலகினார். அவராக விலகினாரா, அல்லது விலக சொன்னார்களா அல்லது தன்னால் வளர்க்கப்பட்டவர்கள் நன்றி மறந்துவிட்டார்களே என்று விரக்தியால் அரசியலுக்கு வராமல் போனாரா என்பது காலத்திற்கே தெரியும். அரசியலில் இருந்தாலும், அரசியலில் இல்லாவிட்டாலும் சசிகலாவை பற்றி பேச்சுகள் இல்லாமல் இருக்க போவது இல்லை. ஏனெனில் அவர் கண்அசைவில் தான் இன்றைக்கு நாம் பார்க்கும் பல அரசியல்கள் தலைவர்களின் எதிர்காலம் மாறியது என்பது மறுக்க முடியாத உண்மை