ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல! ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக சசிகலா!
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து பற்றி சசிகலாவின் ஆதரவு நிலைப்பாடு
தஞ்சை: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
குடியரசு தினமான நாளை, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுநர் ரவி ராஜ்பவனில் தேநீர் விருந்து வைக்கவுள்ளார்.
இதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டும் விசிக, த.வா.க., காங்கிரஸ், உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ள நிலையில் சசிகலா இப்படியொரு கருத்தை கூறியிருக்கிறார்.
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கும்! வேல்முருகன் திட்டவட்டம்!
சசிகலா பயணம்
டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் சசிகலா, இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கணைகளை வீசினர். குறிப்பாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்ய செல்வீர்களா என கேள்வி எழுப்பினர்.
தேநீர் விருந்து
அதற்கு கூலாக பதிலளித்த சசிகலா, இன்று தேதி 25 தானே ஆகிறது, இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது, அதற்குள் என்ன அவசரம் என எதிர்கேள்வி எழுப்பினார். மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டையும், தமிழ்நாடு மக்களையும் பொறுத்தவரை விருந்தோம்பலை கொண்டாடுபவர்கள் என்றும் இந்நிலையில் அழைப்பு விடுத்தும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல எனவும் கூறினார்.
கடும் எதிர்ப்பு
தமிழ்நாடு பெயர் விவகாரம், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னம் தவிர்ப்பு, சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் தராதது, என பல்வேறு காரணங்களுக்காக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் மீது அதிருப்தி தெரிவித்து வரும் சூழலில், மிகவும் வெளிப்படையாக ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் சசிகலா.
டிடிவி தினகரன்
சில நாட்களுக்கு முன்னர் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்தச் நிலையில்தான் சசிகலாவின் நிலைப்பாடு மாறுபட்டதாக இருக்கிறது.