புரட்டி எடுத்த மழை.. பலத்த காற்றால் கும்பகோணம் அருகே பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்!
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பலத்த மழை பெய்த போது மரக்கிளை முறிந்து விழுந்து 10ஆம் வகுப்பு படிக்கும் சுஷ்மிதா என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று மாலை, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, இன்று மாலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது.
பலத்த காற்றுடன் பல்வேறு இடங்களிலும் மழை தொடர்ந்து வருகிறது. கும்பகோணம் அய்யம்பேட்டை பகுதியில் இன்று மாலை பலத்த மழை பெய்தது. அப்போது பசுபதி கோவில் பகுதியில் மரக்கிளை ஒன்று திடீரென முறிந்து விழுந்தது.
தனியார் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவி சுஷ்மிதா மீது மரம் விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவி படுகாயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மழை பெய்து மண்ணைக் குளிர்வித்த சூழலில், பலத்த காற்றால் மரக்கிளை விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications