காங்கிரஸின் நடைப்பயண நாயகன்.. பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழகத்தை சேர்ந்த கணேசன் பலி.. ராகுல் அஞ்சலி
தஞ்சாவூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 60 வயது காங்கிரஸ் நிர்வாகி லாரி மோதி பலியானார். இவர் காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணம், பேரணிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த நிலையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலில் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கி உள்ளார்.
இந்த யாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் வரை இந்த நடைப்பயணம் நடைபெற உள்ளது.
இந்த பாரத் ஜோடோ யாத்திரை செப்டம்பர் 7 ல் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் துவங்கியது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை கடந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் வழக்கம்போல் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கைகளில் காங்கிரஸ் கட்சியின் தேசியக்கொடியை ஏந்தி ஏராளமானவர்கள் உற்சாகமாக யாத்திரை சென்று வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
ரெட் அலர்ட் வாபஸ்..ஆனாலும் அதி கனமழை இருக்கு..இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் யாத்திரை கணேசன்
இந்நிலையில் தான் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்து. தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பூமால் ராவுத்தன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். 60 வயது நிரம்பிய இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வந்தார். இவர் தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் நகர செயலாளராகவும், வார்டு பொறுப்பாளராகவும் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியாக இவர் இருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சி நடத்திய யாத்திரை, பேரணிகளில் இவர் அடிக்கடி பங்கேற்று வந்தார். இதனால் இவர் யாத்திரை கணேசன் எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் பலி
இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கணேசன் பங்கேற்றார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து கேரளா, கர்நாடகா, தெலங்கானா வழியாக மகாராஷ்டிரா வரை அவர் ராகுல் காந்தியுடன் சென்றார். மகாராஷ்டிரா நான்டெட்டில் நேற்று முன்தினம் யாத்திரை முடிந்த நிலையில் கணேசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையி்ல சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ராகுல் காந்தி அஞ்சலி
கணேசனின் உடலுக்கு ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இவரது உடல் விமானத்தில் மகாராஷ்டிராவில் இருந்து இன்று திருச்சி கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து ஆம்புலன்சில் தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேஎஸ் அழகிரி இரங்கல்
தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, ‛‛யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர், குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடைப் பயணங்களிலும், சமீபத்தில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையிலும் தம்மை இணைத்துக் கொண்டவர். திருமணம் செய்து கொள்ளாமலேயே முழு நேர ஊழியராக கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்'' என வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜோதிமணி எம்பி இரங்கல்
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தின் துயரார்ந்த ஒரு தருணம். அண்ணன் யாத்ரா கணேசன், நேற்று நடைபெற்ற விபத்தில் அகால மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து நடைப்பயணங்களிலும் பங்கேற்றவர் என பெருமையை கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.