விஜய்யால் வந்த வினை.. விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் கல்லூரி மாணவன் தந்தை வேதனை
தஞ்சாவூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் செங்கிப்பட்டி பகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார். விஜய்யை பார்ப்பதற்காக வந்த தஞ்சாவூர் கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். விக்னேஷின் தந்தை பாண்டியன், மகன் தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. காலேஜ் போவதாக சொல்லிவிட்டு விஜய்யை பார்க்க சென்று, இப்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார் என வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களே உள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய்யை பார்ப்பதற்காக வந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார் [TVK Vijay].

மாணவன் விபத்து
இதுகுறித்து விக்னேஷின் தந்தை பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் பால்கடை வைத்துள்ளேன். எனக்கு இரட்டை குழந்தைகள். விக்னேஷ் - குமரேஷ் என்று மகன்கள் உள்ளனர். இப்போது விக்னேஷ்க்கு தான் அடிபட்டுள்ளது. அவனின் நண்பனுடன் சென்றுள்ளான். காலேஜ் செல்கிறேன் என காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான். பேட்டரி வண்டி தான் கொடுத்துள்ளோம்.
அவன் அந்த வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, வேறு வண்டியில் சென்றுள்ளனர். காலேஜ் தான் போயிருப்பான் என நினைத்தேன். காலை 11.30 மணிக்கு மேல்தான் விபத்து ஏற்பட்டதாக தகவல் சொன்னார்கள். தகவலறிந்து இங்கு வந்துள்ளேன். அவனுக்கு தலையில் ரத்தக்கசிவு இருப்பதாகவும், அதை சரி செய்ய 2 நாட்கள் ஆகும். தற்போது ஐசியூவில் சிகிச்சை பெறுகிறான். பார்த்துவிட்டு சொல்கிறோம் என மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.
ரத்தக்கசிவு
கால் எலும்பிலும் அடிபட்டுள்ளது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். விபத்து எப்படி ஆனது என்று எனக்கு தெரியாது. என் சின்ன பையன் தான் கூறினான். முன்னாடி 2 வண்டிகள் சென்றுள்ளது. பின்னால் இருந்து ஒரு வண்டி இடித்ததில் இவர்களின் வண்டி அப்படியே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆபரேஷன் உடனடியாக செய்ய வேண்டிய நிலை உள்ளது.
ரத்தக்கசிவு நின்றால் தான் சிகிச்சை கொடுக்க முடியும். அதற்கே 48 மணி நேரம் ஆகும் என்கிறார்கள். அதனால் உடல்நலம் குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை. காலேஜ் சென்று அங்கிருந்துதான் விஜய்யை பார்க்க சென்றுள்ளான் என்கிறார்கள். காலேஜில் வெளியேற்றினார்களா, இவர்களாக சென்றார்களா என தெரியவில்லை. 10 மணிக்கு தான் காலேஜில் இருந்து வெளியில் வந்துள்ளான்" என்றார்.












Click it and Unblock the Notifications